டி.டி. மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை: சர்ச்சைக்குரிய டி.டி மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டிடி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலரை போலீசார் தாக்கினர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அனைவரையும் கிண்டியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதனிடையே மாணவர்களை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
அறவழியில் போராடிய மாணவர்களை கைது செய்து சிறை வைத்துள்ளனர். இவர்களை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கைது செய்துள்ளதாக மாநகர ஆணையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
103 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கருணை அடிப்படையில் அவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் அளிக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைகழகம் போல டிடி மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்தார்.
டிடி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்காததால், 103 மாணவர்களும் இரண்டாமாண்டு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலமே கேள்விக்குறியான மாணவ, மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.