ரயிலில் நகைகளை பறித்த கொள்ளையன்: நிலை தடுமாறி விழுந்த பெண் மூளை சாவு
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் கொள்ளையன் ஒருவன் நகைகளை பறிக்க முயன்றபோது நிலை தடுமாறி விழுந்த பெண் மூளைச்சாவு அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி கோலப்கர் என்ற 43 வயது பெண் பன்வானே என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிகிறார். கடந்த வியாழனன்று. வேலை முடிந்து இரவு 8.30 மணியளவில் மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்தார். அப்போது கொள்ளையன் ஒருவன் அந்தப் பெட்டியில் ஏறி அவரிடம் நகையையும் கைப்பையையும் பறிக்க முயன்றான்.
இதனால் நிலை குலைந்த ஆர்த்தி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மயக்கம் அடைந்தார்.
உடனே கொள்ளையனும் ரயிலில் இருந்து கீழே குதித்தான். மயங்கி கிடத்த ஆர்த்தியிடம் இருந்து நகையையும் கைப் பையையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.
ரயில் அடுத்த ரயில் நிலையத்தில்தான் நின்றது. ஆர்த்தியுடன் சென்றவர்கள் இதுபற்றி ரயில் என்ஜின் டிரைவரிடம் தெரிவித்தனர். அதன்பிறகு ஆர்த்தி விழுந்த இடத்துக்கு ஓடிச் சென்று அங்கு மயங்கி கிடந்த ஆர்த்தியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆர்த்தி பயணம் செய்தது பெண்கள் பெட்டி. அதில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கொள்ளையன் அத்துமீறி இதில் ஏறி நகையை பறித்ததுடன் கீழே தள்ளி உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டதாக மற்ற பயணிகள் கவலை தெரிவித்தனர்.
கீழே விழுந்து அடிபட்டதில் ஆர்த்திக்கு அதிக அளவு ரத்தம் வெளியேறி விட்டது. தலையில் பலத்த அடிபட்டதால் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications