சுரங்க ஊழல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷமிம் பானு கைது

கர்நாடகத்தில் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில் கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷமிம் பானு கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். (அவர் தற்போது கர்நாடகா மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக உள்ளார்.)
அவரை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது ஐஏஎஸ் அதிகாரி ஷமிம் பானு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார். அவர் தவிர டெக்கன் மைனிங் சின்டிகேட்(டிஎம்எஸ்) நிறுவன உரிமையாளர் ராஜேந்திர குமார் ஜெயின், டிஎம்எஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ரிதேஷ் மிலாப்சந்த் ஜெயின் மற்றும் சந்தூர் இன்ஸ்பெக்டர் ரமாகாந்த் ஹுல்லார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1966ம் ஆண்டில் டிஎம்எஸ் நிறுவனத்திற்கு 50 ஏக்கர் நிலம் லீஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் லீஸை 1996ம் ஆண்டு புதுப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் அதற்குள் அந்நிறுவனம் சுரங்கம் மற்றும் நிலவியல் துறையால் மோசமான நிறுவன பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் அந்நிறுவனம் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான சுரங்கங்களை ஆக்கிரமித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்நிறுவனத்தின் லீஸ் புதுப்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த லீஸை புதுப்பித்த விவகாரத்தில் தான் ஷமிம் பானு கைது செய்யப்பட்டுள்ளார்.
பானுவின் கைதையடுத்து கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பானுவுக்கு முழு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய அதிகாரிகள் இந்த வாரம் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கின்றனர்.
இது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில்,
ஷமிம் பானுவை கைது செய்திருக்கக் கூடாது. அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நல்லதல்ல. இனி ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுவது கூட சிக்கலாகிவிடும் என்றனர்.












Click it and Unblock the Notifications