திமுக மாஜி எம்.பி. ஜெயசீலன் வீட்டில் துணிகர கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஐசக் நகரைச் சேர்ந்தவர் ஏ.டி.கே.ஜெயசீலன். முன்னாள் திமுக எம்.பியான இவர் சென்னையில் நடக்கும் தனது உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். வீட்டினை காவலாளி முத்தையா என்பவர் பாதுகாத்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த காவலாளி முத்தையா வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு திகைத்தார். இதுகுறித்து ஜெயசீலனுக்கும், நாசரேத் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து போலீசார் ஜெயசீலன் எம்.பிக்கு தகவல் கொடுத்தனர். பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போய் உள்ள நிலையில் எவ்வளவு கொள்ளை போனது என்பது தெரியவில்லை. திமுக எம்.பி.,ஜெயசீலன் வந்து பார்த்தபின்னரே கொள்ளை போனது எவ்வளவு என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் முன்னாள் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் வீட்டில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது