சென்னையில் மாணவியிடம் பாலியல் குசும்பு: சப்–இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்
சென்னை: சென்னையில் பள்ளி மாணவியிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முயன்ற சப்.இன்ஸ்பெக்டரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சென்னை சோலையூர் பவானி நகரை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகள் ராகினி வயது 14. இவர் அதே ஏரியாவில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜாராம் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்.
ராகினி நேற்று மாலை தெருவில் நடந்து சென்ற போது அப்பகுதியை சேர்ந்த கிளமென்ட்ராஜ்(30) என்பவர் ‘‘நீ கேட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. வீட்டுக்கு வா'' என்று அழைத்துள்ளார். கிளமென்ட்ராஜ் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். புத்தகம் வாங்க அவரது வீட்டுக்கு சென்ற ராகினியிடம் கதவை சாத்தி விட்டு கிளமென்ட் மாணவியிடம் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
உடனே மாணவி சத்தம் போடவே சத்தம் கேட்டு மாணவியின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். கதவை திறந்த கிளமென்ட் என்ன விஷயம்? இங்கு யாரும் இல்லை என்றார். ஆனால் மாணவியின் அழுகுரல் கேட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியிடம் விசாரித்தார்கள்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் தன்னிடம் தவறாக நடந்தார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அங்கு வந்தவர்களிடம் மாணவி தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தனர். தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை அங்கு வந்தார். சேலையூர் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். ஆனால் அதை போலீசார் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் சென்று சப்-இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கொடுத்தனர்.
உதவி கமிஷனர் தன்ராஜ் புகாரை பெற்றுக் கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications