3 விவசாய சட்டங்கள் வாபஸ்: தடுமாறும் அதிமுக- கூட்டணி: பின் வாங்காத திமுக- தோழமை கட்சிகள்: ஒரு அலசல்
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுகவினர் பலமாக ஆதரித்தனர். கூட்டணிக்கட்சிகளும் ஆதரித்தன. மறுபுறம் திமுக, அதன் தோழமைக்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தற்போது பிரதமர் வாபஸ் பெற்றதில் அதிமுக சங்கடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்த்த 3 வேளாண்சட்டங்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண்சட்டங்களை மத்திய அரசு அதிரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் குரலையும் கேட்காமல் மெஜாரிட்டி பலம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று சட்டமானது.
இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:
1.வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020, 2.விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020
3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020, அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், விவசாயிகளிடம் இச்சட்டங்களை புரியவைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், தான் மன்னிப்பு கேட்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்து சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
ஓங்கி நின்று ஆதரித்த அதிமுக கூட்டணிக்கட்சிகள்
பிரதமரின் திடீர் வாபஸும், மன்னிப்பு கேட்டதும் தமிழகத்தில் வேளாண்சட்டங்களை ஓங்கி நின்று அதிமுக அதன் ஆதரித்த கூட்டணிக்கட்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்ட 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் யார் யார் எந்தப்பக்கம் நிற்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்தது. அன்புமணிராமதாஸ் அன்று ஆஜராகி வாக்களித்தது நாடாளுமன்றத்துக்கே போகாதவர் இதற்கு மட்டும் ஆஜராகி வாக்களித்தது ஏன் தமிழக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

பிரச்சார பீரங்கியான எடப்பாடி பழனிசாமி
தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி மேடை தோறும் தெரிவித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 வேளாண்சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்தார். வேளாண்சட்டங்கள் குறித்து தெரியாதவர்கள், ஸ்டாலினுக்கு விவசாயத்தைப்பற்றி என்ன தெரியும், அவர் நகர் புறத்திலே வளர்ந்தவர், நான் ஒரு விவசாயி என்றெல்லாம் பேசினார். அதில் உள்ள சரத்துகளை ஆதரித்து வாதங்களை எடுத்து வைத்தார்.
எதிர்த்து பேசிய மாநிலங்களவை அதிமுக எம்.பி
'உழவர் சந்தைக்கோ, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கோ பாதிப்பு இல்லை' பஞ்சாப் எதிர்ப்பது, சந்தைக்கட்டணம் உள்ளிட்ட கட்டண வருவாய் பாதிப்பதால் என்று பேசினார். ஆனால் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். மறுபுறம் அதிமுகவின் ஒரே மக்களவை எம்பி ரவீந்திரநாத் தமிழகத்திலிருந்து ஆதரித்த ஒரே குரலாக பேசினார்.
மக்களவையில் ஆதரித்த ஒரே தமிழக எம்.பி.ரவீந்திரநாத்
மக்களவையில் ஆதரித்த ஒரே தமிழக எம்.பி.ரவீந்திரநாத், பேசியதாவது, "கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் நமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, இந்திய வேளாண் விற்பனை முறையை மேம்படுத்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த மசோதா மூலம் நீண்டகாலமாக நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் வருவாய் இரட்டிப்புக்கு பாதகமான தடங்கல்களை கலைந்துள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய கொள்கை சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்" என்று ரவீந்திரநாத் பேசினார்.மசோதாக்களை ஆதரித்து வாக்களித்ததற்காக ரவீந்திரநாத்குமாரை, விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்' என்று விவசாய சங்கங்கள் விமர்சித்தன.

திமுக தோழமைக் கட்சிகள் கடும் எதிர்ப்பு
தமிழகத்தில் 3 வேளாண் சட்டங்களை திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் எதிர்த்து கடும் போராட்டங்கள் நடத்தின, சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உண்ணாநிலை போராட்டம் நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்து, விவசாயிகளின் நலன் குறித்து கொஞ்சம்கூட இரக்கமின்றி நடந்துகொண்டிருக்கிறது. இனியொரு முறை மேடைகளில் நின்று நான் ஒரு விவசாயி' என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று விமர்சித்தார்.
ஆட்சிக்கு வந்தப்பின் சட்டப்பேரவையில் திமுக தீர்மானம்
ஆட்சிக்கு வந்தபின்னரும் திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தன. திமுக தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் எதிர்த்து தீர்மானம் போடவில்லை. நீங்கள் செய்ய முடியாததை நாங்கள் செய்து தருகிறோம் , எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.டெல்லிக்கு சென்று வலியுறுத்தியும் எந்த பதிலும் வரவில்லை, எனவேதான் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி, பணிவோடு கேட்கிறேன் ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
நிலை உணர்ந்து பின் வாங்கிய பாமக
தமிழக அரசு தீர்மானத்தின் மீது அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தாலும் மசோதாவை ஆதரித்து மாநிலங்கவையில் வாக்களித்த பாமக இம்முறை தனது நிலையை மாற்றி தீர்மானத்துக்கு ஆதரவை அளித்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே தீர்மானத்தை ஆதரிக்கிறோம்" என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி ஆதரவு தெரிவித்து பேசினார்.

வராத எடப்பாடி நழுவிய ஓபிஎஸ், வெளிநடப்பு செய்த அதிமுக
சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. துணைத்தலைவர் ஓபிஎஸ் பேசினார். அப்போது கடும் வாதம் நடந்தது. தீர்மானத்தின் மீது அதிமுக நிலைப்பாடு குறித்து பேசிய ஓபிஎஸ்,
"சட்டங்களில் உள்ள பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சென்று உண்மைத்தன்மையை விளக்கி கூறி நமக்கு சாதகமான பதில் கிடைக்குமானால் திருத்தத்தை கொண்டு வரலாம். விவசாய நலன் கருதி அரசு எடுக்கும் நலனுக்கு கட்டுப்படுவோம், ஆனால் இந்த சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம். பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம்" என கூறினார்.

மடக்கி கேள்விக்கேட்ட துரைமுருகன்
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், "குழந்தைக்கு கூட தெரியும், இந்த சட்டத்தில் உள்ள பாதகங்கள் , ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா?" என நேரடியாக கேள்வி எழுப்பினார்.
மீண்டும் பேசிய ஓ.பி.எஸ் "சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களை கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கலாம் , சாதக பாதகங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை" என்று கூறினார்.
இதற்கு முழுமையான ஆதரவை தரவேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

கைவிட்ட பாஜக சங்கடத்தில் அதிமுக
தற்போது பாஜக திடீரென வேளாண் சட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் வேளாண் சட்டங்களை ஆதரித்த ஒரே பெரிய கட்சி என்கிற அளவில் அதிமுக சங்கடப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தனிப்பட்ஜெட் கேட்கும் பாமக ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் வேளாண் சட்டத்துக்கு எதிராக நின்று தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டது.












Click it and Unblock the Notifications