பாக். எல்லையில் பரபரப்பு! சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படை வீரர்.. 5 பேர் உயிரிழப்பு
அமிர்தசரஸ்: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸில் இன்று காலை எல்லை பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் சத்தேப்பா எஸ்.கே. என்பவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
அதேநேரம் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா இல்லை மற்ற வீரர்கள் அவரை சுட்டனரா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் காசா பகுதியில் உள்ள 144வது பட்டாலியனின் வளாகத்தில் நடந்துள்ளது. இந்தப் பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் இருந்து சுமார் 12-13 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தச் சம்பவம் காலை 9:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கான்ஸ்டபிள் மற்றும் தலைமைக் காவலர் பதவியில் இருந்தவர்கள் ஆகும்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக சக வீரர்கள் மீது சத்தேப்பா துப்பாக்கிச் சூடு நடத்தினார் எனத் தெரியவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications