விமானத்தில் பறக்கும்போது பயமாக இருக்கிறதா? இதை ஃபாலோ பண்ணுங்க.. பயம் பறந்து போயிடும்!
சென்னை: முதல் முறை விமான பயணத்தின்போதும் சரி, தொடர் விமான பயணத்தின்போதும் சரி சிலருக்கு அதீத பயம்/பதற்றம் ஏற்படும். இதை கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் சில வழிகளை கூறியிருக்கிறார்கள்.
மொத்தம் 7 வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனை பின்பற்றும்போது மனம் இயல்பு நிலைக்கு திரும்பி பயம்/பதற்றம் குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

1. உடலை குளிர்வித்தல்
2. சுவாசத்தை கட்டுப்படுத்துதல்
3. உணர்வை கட்டுப்படுத்துதல்
4. சுயநினைவு அடைதல்
5. உதவிக்கு நண்பர்களை நாடுங்கள்
6. நம்மை நாமே தேற்றிக்கொள்ளுதல்
7. ஆலோசனை பெறுதல்
நம் மனதை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் சில நேரங்களில், உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் அது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை. யேல் மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்ற நரம்பியல் அறிஞர் டாக்டர் பிரையன் ராமோஸ் இதை உறுதி செய்திருக்கிறார். ஆனால் இதுபோன்ற சூழலில், நாம் நரம்பியல் அமைப்பில் உள்ள பராசிம்பத்தெட்டிக் (parasympathetic) பகுதியை செயல்படுத்தி மனதை சரி செய்துக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.
உடலை குளிர்வித்தல்:
விமானத்தில் பயணிக்கும்போது பதற்றமாக இருந்தால் முதலில் இந்த விஷயத்தை பின்பற்றுங்கள். குளிர்ந்த உணவு மற்றும் பானங்களைச் சாப்பிடுங்கள். அது உடலுக்கு ஃப்ரெஷ் அனுபவத்தை கொடுக்கும். அதேபோல கூலிங் கொண்ட ஜூஸ் பாட்டிலை நெற்றியில் ஒத்தடம் கொடுங்கள். இது உடல் வெப்பத்தை குறைத்து மன அமைதியை ஏற்படுத்தும்.
உடலில் அட்ரினலின் (Adrenaline) வெளியேறுவதால் பதற்றம் உருவாகிறது. இதை சரி செய்ய சிம்பத்தெடிக் நரம்பு அமைப்பை (Sympathetic Nervous System) தூண்ட வேண்டும். உடலை குளிர்விப்பதன் மூலம் இதை செய்ய முடியும்.
சுவாசத்தை கட்டுப்படுத்துதல்:
மன அமைதியை ஏற்படுத்த சுவாச பயிற்சி நல்ல வழி என்று ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 4-7-8 முறையில் சுவாசித்தால் பதற்றம் குறையும். அதாவது, 4 விநாடிகள் சுவாசிக்கவும், 7 விநாடிகள் தக்கவைத்திருக்கவும், 8 விநாடிகள் வெளியில் விடவும். இது தவிர Box Breathing என்கிற இன்னொரு முறை இருக்கிறது. 4 விநாடிகள் உள்ளிழுக்கவும், 4 விநாடிகள் தக்கவைத்திருக்கவும், 4 விநாடிகள் வெளியே விடவும். அடுத்த 4 விநாடி உங்களுக்கே ரிலாக்ஸாக தோன்றும்.
உணர்வை கட்டுப்படுத்துதல்:
இதில் 5-4-3-2-1 உணர்வு கட்டுப்பாட்டு நுட்பம் (Grounding Technique) பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பதற்றமாக இருக்கும் நேரத்தில் உங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள 5 பொருள்களை கவனியுங்கள். அது ஒரு மலையாக, பேனாவாக, புத்தகமாக கூட இருக்கலாம். பின்னர் 4 பொருட்களை தொடுங்கள். துணி, டேபிள், ரிமோர்ட், வாட்டர் பாட்டில் என எதுவாக இருந்தாலும் 4 பொருட்களை தொட்டு உணருங்கள்.
பின்னர் உங்களை சுற்றி 3 ஒலிகளை கேளுங்கள். குழந்தையின் அழுகை, ரேடியோவில் பாட்டு, ஹாரன் சத்தம் என எதுவாக இருந்தாலும் சரி. அதேபோல 2 வாசனையை உணருங்கள். காபி மணம், பிடித்த சென்ட் இப்படி எதையாவது. கடைசியாக ஒரு சுவையை உணர வேண்டும். குளிர்ந்த நீர், பற்பசை, பழச்சாறு இப்படி எதுவாக இருந்தாலும் ஓகேதான்.
இப்படி செய்வதன் மூலம் மனம் யதார்த்த நிலைக்கு திரும்புகிறது. நிகழ்காலத்திற்கு நினைவு வருகிறது. எனவே மனம் பதற்றமில்லாமல் அமைதியாகிறது.
சுயநினைவு அடைதல்:
இதுவும் முந்தைய கட்டத்தை போலதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது கையில் புளிப்பு மிட்டாய் எடுத்து செல்லுங்கள். பதற்றமாக இருக்கும்போது அதில் ஒன்றை தூக்கி வாயில் போட்டுக்கொள்ளுங்கள் பதற்றம் பறந்துவிடும்.
உதவிக்கு நண்பர்களை நாடுங்கள்:
அதாவது பயணத்தின்போது உங்கள் நண்பர் அருகில் இருந்தால் அவர்களை உங்கள் கைகளை பிடித்துக்கொள்ள சொல்லுங்கள். வாய்ப்பு இருந்தால் தலையில் லேசான மசாஜ் கூட செய்ய சொல்லலாம். மென்மையான தொடு உணர்வும், லேசான மசாஜும் நரம்பியல் அமைப்பை (nervous system) தளர்த்தி பதற்றத்தை குறைக்கும்.
நம்மை நாமே தேற்றிக்கொள்ளுதல்:
சரி பயணத்தில் யாரும் உடன் வரவில்லை எனில் என்ன செய்வது? அந்த நேரத்தில் உங்களை நீங்களே சமாதானம் செய்துக்கொள்ள வேண்டும். "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் அமைதியாக இருக்கிறேன். பத்திரமாக வீட்டுக்கு போய்விடுவேன். பயணம் இனிமையாக அமையும்" என்று சொல்லிக்கொள்ளுங்கள். நேர்மறையான வார்த்தைகள் பதற்றத்தை விரட்டும். ஆனால் கொஞ்சம் மெதுவாக சொல்லிக்கொள்ளுங்கள். பக்கத்தில் இருப்பவர் பயந்துவிடப்போகிறார்.
ஆலோசனை பெறுதல்:
எல்லாமே செஞ்சு பார்த்தாச்சு.. வேலைக்கே ஆகல! என்கிற நிலை வரும்போது மனநல ஆலோசகரை அணுகுவது சிறந்தது. அவர்கள் CBT (Cognitive Behavioral Therapy) போன்ற உளவியல் முறையை பரிசோதித்து, பிரச்சனை என்னவென்று சரியாக கணித்து அதற்கான சிகிக்சையை அளிப்பார்கள். இது சீக்கிரமாகவே பிரச்சனையை சரி செய்துவிடும்.












Click it and Unblock the Notifications