புரட்டிப் போட்ட பெருமழை.. மயிலாடுதுறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! குன்றத்தூரிலும் லீவ்!
மயிலாடுதுறை: வரலாறு காணாத பெருமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டம். இம்மாவட்டத்தின் சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு இப்படியான கனமழை வெளுத்தெடுத்திருக்கிறது. மேகவெடிப்பின் காரணமாக இப்பெருமழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகள் கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதிப்பு
இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. கொட்டிய கனமழையால் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சம்பா சாகுபடி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தின் சாலைகள் பல இடங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

நிவாரணப் பணிகள்
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீர்காழியில் மட்டும் 9 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை முகாம்களில் சுமார் 16,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசு தரப்பு முழு வீச்சில் மேற்கொன்டு வருகிறது.

முதல்வர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். சீர்காழியில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்புகள், சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை நாளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று இரவு சாலை மார்க்கமாக சென்னயில் இருந்து புதுச்சேரி புறபப்ட்டார் முதல்வர் ஸ்டாலின்.

சீர்காழியில் ஆய்வு
புதுச்சேரியில் இன்று இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து சீர்காழிக்கு செல்ல இருக்கிறார். சீர்காழியில் பள்ளி, கல்லூரிகளும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications