பெற்றோர்களே உஷார்.. பப்ஜி கேமில் தோல்வி.. நண்பர்கள் கிண்டல் செய்ததற்காக உயிரை விட்ட மாணவன்!
கிருஷ்ணா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை, சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் பிரபு,
தினமும் நண்பர்களுடன் சேர்ந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடியபோது தோல்வியடைந்ததால் அவரது நண்பர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திரா
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கௌரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பப்ஜி விளையாட்டு
லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16). தனது தந்தையுடன் சித்தி வீடான மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் கேமை விளையாடி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.

கேலி செய்த நண்பர்கள்
நண்பர்கள் அதிகமாக கேலி செய்ததால் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மம்
இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கௌரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணங்கள்
முன்னதாக கடந்த வாரம், லக்னோவில், 16 வயது சிறுவன், பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களை விளையாட விடாமல் தடுத்ததால், ராணுவத்தில் இருக்கும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது தாயை சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் உயிரைப் பறிப்பதால் அரசு அந்த விளையாட்டுகளை கடுமையாக தடை செய்து, யாருமே விளையாடதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications