ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி! அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் தீவிர ஆலோசனை
அபுதாபி: ஜெர்மனியில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற நிலையில் அவர் அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசித்தார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தர்.
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் 2 நாள் ஜி7 உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. ஜி7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த உச்சி மாநாட்டு பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார். இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார்.
தேடிவந்த ஜோபைடன்! பிரதமர் மோடியின் தோளை தட்டி கைக்குலுக்கி வாழ்த்து! ஜெர்மனியில் நெகிழ்ச்சி
ஜெர்மனிக்கு 2 நாள் பயணம்
நேற்று முன்தினம் ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு முனிச் நகரில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதையடுத்து நேற்று ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளில் அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேறார்.
உலக தலைவர்களுடன் சந்திப்பு
ஜி7 நாட்டு தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி பேசினார். மேலும் எரிசக்தி துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம் தொடர்பாக தலைவர்கள் விவாதித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மோடி
இந்நிலையில் ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்தியா வரும் வழியில் திட்டமிட்டப்படி அவர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் , பிரதமர் மோடியை வரவேற்றார்.
ஆலோசனை- இரங்கல்
இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் இருநாடுகள் இடையேயான உறவுகள், தொழில் வர்த்தகங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலிபா கடந்த மே 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரித்தது. ஷேக் கலிபா இந்தியாவுடன் நல்லுறவை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.