டெலிகிராம் சிஇஓ கைது.. பிரான்ஸின் ரஃபேல் விமானத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தது UAE!
அபுதாபி: பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ், கடந்த சனிக்கிழமை பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இருப்பினும், பிரான்ஸிடமிருந்து ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவராவார். இருப்பினும் இவர் தனது குழந்தை பருவத்தை பெரும்பாலும் இத்தாலியில்தான் கழித்திருக்கிறார். தற்போது இவரிடம், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், கரீபியன் தீவு நாடான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றின் குடியுரிமை இருக்கிறது. ரஷ்யாவில் டெலிகிராமின் அலுவலகத்தை துரோவ் வைத்து நடத்தி வந்தபோது ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டது.

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்து விடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.
அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்து விட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறி விட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் ஆக.24ம் தேதி அவர், பிரான்ஸ் வந்திருந்தபோது, அந்நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் துரோவ் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது பிரான்ஸும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ராணுவ ரீதியில் பயங்கர நண்பர்கள். அபுதாபியில் பிரெஞ்சு கடற்படை தளம் இயங்கி வருகிறது. அதேபோல் UAE, லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன.
மேலும் சில ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு UAE, பிரான்ஸிடம் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால், துரோவ் கைது காரணமாக இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக UAE அறிவித்திருக்கிறது. இதன் மூலம் துரோவ் கைதுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications