வெளுத்து வாங்கிய கனமழை.. சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை: சீர்காழி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
சென்னை மட்டுமின்றி மயிலாடுதுறை, சீர்காழியில் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் சூழலே உள்ளது.
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் 44 சென்டிமீட்டர் அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்து உள்ளது.
இதற்கிடையே சீர்காழி தாலுகாவில் இன்றைய தினம் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை கலெக்டர் லலிதா அறிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அங்குப் பெய்த கனமழை காரணமாக மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை மறு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாகவே சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீர்காழி தாலுகாவில் இதர வகுப்புகளும், கல்லூரிகளும் கூட வழக்கம் போலவே இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications