கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு!
அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்: அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 20 நிமிட போராட்டத்திற்கு பின் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து தற்போது தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் கூட மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மிகவும் சிறியது ஆகும்.
25 பேர் செல்ல வேண்டிய படகில் கூடுதலாக 5 பேர் சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது இந்த படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். இவர்களின் நிலை என்ன ஆனது என்று முதலில் தெரியவில்லை.
இதில் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அதன்பின் தண்ணீர் மூழ்கிய 10 பேரை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மக்கள் மீட்டனர். 20 நிமிடம் போராடி இந்த 10 பேரும் மீட்கப்பட்டனர்.
அதன்படி தற்போது படகில் சென்ற 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.