கங்கை கொண்ட சோழபுரம் கோவில்.. சொந்த விதிகளை காற்றில் பறக்கவிட்ட தொல்லியல் துறை! ஐகோர்ட் காட்டம்
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பு : தஞ்சை பெரியகோவில், நாமக்கல் நரசிம்மர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் மூடல்
தஞ்சை கோயில்
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புராதன கோயில்களில் ஒன்றாக அறியப்படும் இந்தக் கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியத் தொல்லியல் துறை
அந்த மனுவில், இந்திய தொல்லியல் துறை சார்பில் இந்த கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அறநிலையத் துறை அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 38, 39 மீட்டர் தூரத்தில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொல்லியல் துறை
இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் சொந்த விதிகளையே தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டு கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறி, கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக தொல்லியல் துறை பதிலளிக்க இரு வார அவகாசம் வழங்கிய நீதிபதி, கட்டிடங்கள் கட்டியிருந்தால் இந்த விதிமீறலுக்கு யார் காரணம் எனவும் விளக்கமளிக்கவும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.