பிஸ்ன்ஸமேன், ஐஐஎம் பட்டதாரி.. தமிழ்நாட்டின் புதிய ஏஐ, ஐடி அமைச்சர் ஆர்.குமார் அறியாத முகம்..!
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய கூட்டணி அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளவர் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமார். தமிழக வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்த முக்கியத் துறைக்கு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.குமார் ஒரு முதல் தலைமுறை தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1989-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) சிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றார். படிக்கும் போதே சிறிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தனது கல்விச் செலவை தானே ஈட்டியவர்.

அதே ஆண்டு CREATIONS என்ற தனது முதல் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் 1990-ல் CREATIONS Concrete Prefab Products நிறுவனத்தை உருவாக்கினார். 1992-ல் வினய் கிரானைட்ஸ் (Vinay Granites) மற்றும் 1994-ல் ஜூபிலி கிரானைட்ஸ் (Jubilee Granites) ஆகிய கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்களைத் தொடங்கினார். 2000-ம் ஆண்டு முதல் குடியிருப்பு வீடு கட்டும் தொழிலிலும் நுழைத்து கட்டுமானத்தில் பெரும் வரத்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.
அவர் IIM பெங்களூரில் பிசினஸ் லீடர்ஷிப் படிப்பு முடித்துள்ளார். சமூக சேவைக்கான பங்களிப்புக்காக டாக்டர் ஆஃப் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் (Honoris Causa) பட்டமும் பெற்றுள்ளார். அவரது மனைவி அஷா மரினா எஸ். பி.இ., எம்.எஸ். (பிட்ஸ் பிலானி) பட்டதாரியாவார். அவர் கிரியேஷன்ஸ் ப்ரமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குநராக உள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட ஆர்.குமார் 80,430 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கை 33,305 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
தொழிலதிபரான ஆர் குமார் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது மொத்த சொத்து மதிப்பாக ரூ.117.8 கோடி என அறிவித்துள்ளார். மேலும் அவர்மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு வேளச்சேரியில் பல நிர்வாக பிரச்சனைகளில் தீவிரம் காட்டினார். குறிப்பாக, மழைநீர் வடிகால் (Storm Water Drain) பணிகளில் தரக்குறைவு இருப்பதை சுட்டிக்காட்டி, சமீபத்தில் கட்டுமான பணிகளுக்கான பணத்தை ஒதுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மிக முக்கியமான ஏஐ, ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையைப் பொறுப்பேற்றுள்ள ஆர்.குமார், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையமாக மாற்றும் பணியில் ஈடுபட உள்ளார். அவரது தொழில்முனைப்பு அனுபவம் மற்றும் நிர்வாகத் திறன் இந்தப் புதிய துறைக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications