ராமருக்கு வரலாறும் கிடையாது.. ஆதாரமும் கிடையாது.. அமைச்சர் சிவசங்கர் பேச்சு
அரியலூர்: ராமருக்கு வரலாறே கிடையாது. ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சோழர்களின் கட்டடக் கலை, ஆட்சி முறை குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில், அரியலூரில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டு மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன், எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனுக்கு மூன்றாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. ராமரைப் பற்றி பேசுபவர்கள்கூட அவரை அவதாரம் என்றுதான் கூறுகின்றனர். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது.
நமது வரலாற்றை மறைத்து, நம்மை மயக்கி வேறு ஒரு வரலாற்றை உயத்திக் காட்டுவதற்காக இந்த செயலை எல்லாம் செய்கின்றனர். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்று பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடந்த கம்பன் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சிதான்.
ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம் என்றார். மேலும், சமூக நீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து, உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். இருக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உருவாக்கப்பட்டதுதான் ராமகாவியம். கம்பராமாயணத்தில் ராமரைப் பற்றிச் சொல்லிய அனைத்து கருத்துகளும் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துகள். சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு நேர் எதிரான போக்குவரத்து துமைச்சர் சிவசங்கரின் தற்போதைய பேச்சு கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications