’கங்கை’ கொண்டு வந்த அன்புமணி! விமானத்தில் பறந்து வந்த கலசம்! சத்தமில்லாமல் அரியலூரில் செய்த சம்பவம்!
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நடை பயணத்தின் இரண்டாவது நாள் பிரச்சாரத்தின் போது, கங்கை கொண்ட சோழனை நினைவு படுத்தும் வகையில், கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரினை சோழ கங்கம் ஏரியில் கலந்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
சோழர் நீர்ப்பாசன திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் விழிப்புணர்வு எழுச்சி நடைப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 29ஆம் தேதி கீழப்பழுவூர் பகுதியில் தொடங்கிய அன்புமணி ராமதாஸின் நடைபயணம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது பல இடங்களில் மக்களைச் சந்தித்த அவர் சோழர் நீர்ப்பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ்
அவரது இந்த பயணம் அரியலூர் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்னொன்றையும் செய்திருக்கிறார் அன்புமணி. ராஜேந்திர சோழன் செய்ததை திரும்ப செய்த நிகழ்கால சோழன் அன்புமணி ராமதாஸ் என சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர் பாட்டாளிகள். அப்படி என்ன செய்தார் என கேட்கிறீர்களா?. சோழப்பேரரசில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்த மாமன்னர் ராஜேந்திர சோழன் கங்கை வரை கொண்ட வெற்றியின் நினைவாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை தலைநகராக நிர்மாணித்து ஆட்சி செய்தவர்.

சோழ கங்கம்
கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகே கங்கை நீரை கொண்டு வந்து கலந்து வெட்டிய ஏரியே பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி. இந்த பொன்னேரி சோழர் கால நீர் பாசன திட்டத்தில் முக்கியமான அங்கம் வகித்தது. இந்த ஏரிக்கு பொன்னாறு வழியாக நீர் வருவதற்கான கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலப்போக்கில் பொன்னேரிக்கு வரவேண்டிய நீரானது தடைபட்டு போகவே, பொன்னேரி ஆனது வறண்ட ஏரியானது. இதுபோன்ற பல ஏரிகள் அரியலூர் மாவட்டத்தில் பயன்படாத வகையில் சென்றுவிட்டது.

விமானத்தில் வந்த கங்கை
இந்த ஏரிகளை சீரமைத்து, கால்வாய்களை புணரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, சோழர் பாசன திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று பொன்னேரி ஏரியை பார்வையிட வந்த அன்புமணி, கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை பொன்னேரியில் கலந்தார். இதற்காக கங்கையிலிருந்து விமானம் மூலம் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பொன்னேரியில் கலக்கப்பட்டது.

சோழர் பாசன திட்டம்
ராஜேந்திர சோழன் காலத்தில் கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்து வெட்டப்பட்ட ஏரி, சோழர் காலத்தில் பாசனத்திற்கு பயன்பட்டது. அதே போல அன்புமணியால் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரின் மூலம், ஏரியை சீரமைத்து பாசன திட்டம் மீட்கப்பட்டு மீண்டும் சோழநாடு வளமான நாடாக மாறிட வேண்டும் என்பதும் அவர் விருப்பம் என்கின்றனர் பாட்டாளிகளும் அரியலூர் மாவட்ட மக்களும். கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை பொன்னேரி ஏரியில் கலந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி,"கட்சி, ஜாதி, மதம் போன்றவற்றை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். வரும் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிறார். மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததன் எதிரொலியாக, இங்கு வந்ததும் அவரின் வாயால் அறிவிப்பு வெளியாக வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications