தமிழக எம்எல்ஏக்களிலேயே மிகவும் சுறுசுறுப்பானவர் உதயநிதி.. அதனால்தான் அமைச்சர் பதவி! சிவசங்கர் பேச்சு
அரியலூர் : எம்எல்ஏக்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதியன்று தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது பற்றி எதிர்க்கட்சியினர் 'வாரிசு அரசியல்' என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டுக்காகவே அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதாக திமுக அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணமே ஆவடி நாசர் தான்- அமைச்சரான பின் முதல் பொதுக்கூட்டத்தில் உதயநிதி!
அன்பழகன் நூற்றாண்டு விழா
அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் மறைந்த முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றார். இந்தப் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சிவ.மாணிக்கம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ரா.முருகேசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எளிமையான தலைவர்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "திராவிட சித்தாந்தத்தை நமக்கு அளித்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை விழாவாக கொண்டாட கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் 100 இடங்களில் அன்பழகன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் இரண்டாம் நிலை தலைவராக இருந்தபோது கூட எளிமையாக இருந்தவர் அன்பழகன். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக்கூடியவர்." என புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
மேலும் பேசிய அவர், "இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்காகவும் போராடி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு தொடுத்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவரும் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.
எம்.எல்.ஏக்களில் சுறுசுறுப்பானவர்
மேலும், "ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. இது நாளை நமது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான் குரல் கொடுத்தார். அரியலூருக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட புதிய அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக எம்எல்ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடு போகப்போக அனைவருக்கும் தெரியவரும்" எனப் பேசினார்.