30,000 நீச்சல் குளம் நிரம்பி இருக்கும்.. வரலாறு காணாத பெங்களூர் மழையில் என்னவெல்லாம் செய்திருக்கலாம்
பெங்களூர்: பெங்களூரில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததோடு, பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் இந்த மழையை பயன்படுத்தி பெங்களூரு என்ன செய்திருக்க முடியும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பெங்களூர் நகரில் கோடை வெயிலுக்கு மத்தியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரில் வெயில் சற்று குறைந்துள்ளது.

பெங்களூர் நகரின் முக்கிய சாலைகளில் ஆலங்கட்டிகள் சாலைகளில் சிதறி பனிபிரதேசம் போல் காட்சியளித்தது. அதுமட்டுமின்றி ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணிநேரத்தில் அதிகப்படியான மழையாக பதிவானது.
11 சென்டி மீட்டர் மழை
கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி 24 மணிநேரத்தில் பெங்களூரில் 108.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுதான் ஏப்ரல் மாதத்தில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவாக இருந்தது. இது நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை பெங்களூரில் 111 மில்லி மீட்டர் (11 சென்டிமீட்டர்)மழை பதிவாகி உள்ளது.
மொத்தம் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த மழையை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இதுபற்றி வானிலை மற்றும் நீரியியல் நிபுணர்கள் கூறியதாவது:

ஆண்டு மழையில் 10 சதவீதம்
''பெங்களூர் நகரின் அமைவிடம் என்பது Geographical ridgeயில் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 95 செமீ முதல் 110 செமீ வரை மழை பெய்யும். ஆனால் நேற்று முன்தினம் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது ஆண்டுக்கான மொத்த மழையின் 10 சதவீதமாகும். நேற்று முன்தினம் நகரில் 200 சதுரகிலோமீட்டர் பரபரப்பளவில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன்மூலம் பெங்களூருவுக்கு 20 மில்லியன் கனமீட்டர் நீர் முதல் 22 மில்லியன் கன மீட்டர் நீர் வரை கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. அதாவது 0.75 டிஎம்சி தண்ணீர் கிடைத்து இருக்கலாம்.
2 வார நீர்தேவையை..
மேலும் இந்த ஒருநாள் மழையை வைத்துபெங்களூர் நகரின் 2 வார வார நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு நகர் முழுவதும் சிமெண்ட் சாலைகள் உள்ளதால் மிக குறைந்த அளவிலான நீர் மட்டுமே நிலத்தடிக்குள் ஊடுருவி இருக்க முடியும்.
30,000 நீச்சல் குளத்தை நிரப்பியிருக்கலாம்
நேற்று முன்தினம் பெய்த மழையை வைத்து சுமார் 5 முதல் 6 அடி ஆழம் கொண்ட 25 மீட்டர் நீளத்தில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட நீச்சல் குளங்களை தண்ணீரால் நிரப்பி இருக்க முடியும். பெங்களூர் நகரில் 1970ம் ஆண்டில் நகரில் ஏரிகளில் 5 டிஎம்சி வரை சேமித்து வைக்க முடியும். ஆனால் 2025ல் அதன் அளவு வெறும் 1.5 டிஎம்சியாக குறைந்துள்ளது. ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. இருப்பினும் தற்போதுள்ள ஏரிகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது பெய்த மழையை வைத்து ஏரிகளில் மூன்றில் இரண்டு பங்கை நிரப்பியிருக்க முடியும்.
இப்படியாக இந்த மழையை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் மழைநீர் சேமிக்க நடவடிக்கை இல்லை. இதனால் கால்வாயில் மழைநீர் வழித்தோடி வீணாகிவிட்டது.'' என கவலையை பகிர்ந்து கொண்டனர்.














Click it and Unblock the Notifications