கடைசியில் மாறிய பிளான்.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்! சோகம்
பெங்களூர்: ஐபிஎல்லில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் பெற்று கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து நேற்று பெங்களூரில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட ஊர்வலத்துக்கு ஏற்பாடு செயயப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பிளான் தான் இந்த கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாக காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த கடந்த 3ம் தேதி நடந்த இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணி வீரர்கள் நேற்று வெற்றி கோப்பையுடன் பெங்களூர் வந்தனர். பெங்களூர் விதானசவுதாவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை வெற்றி கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்பிறகு பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிகமான ரசிகர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் திடீரென்று கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மோசமான திட்டம் மற்றும் கடைசி நேரத்தில் நடந்த மாற்றம் உள்ளிட்டவை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இதனை பெங்களூர் ரசிகர்கள் அதிகாலை வரை கொண்டாடினர். பெங்களூரில் முக்கிய சந்திப்பு மற்றும் சாலைகளில் ஊர்வலமாக ரசிகர்கள் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதன்பிறகு நேற்று காலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரில் திறந்த பஸ்சில் வெற்றி கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் செல்ல உள்ளனர். விதானசவுதா முதல் சின்னச்சாமி மைதானம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை இந்த ஊர்வலம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைனில் பாஸ் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் ஆன்லைனில் பாஸ் பெற்றனர்.
மேலும் பெங்களூரை நோக்கி ஆர்சிபி ரசிகர்கள் வர தொடங்கினர். அதன்பிறகு நேற்று காலை 11.56 மணிக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி ஊர்வலம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தான் மதியம் 1.30 மணிக்கு எச்ஏஎல் விமன நிலையத்துக்கு ஆர்சிபி வீரர்கள் வந்தனர். அங்கிருந்து பஸ்சில் அவர்கள் ஹோட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதற்கிடையே பெங்களூர் விதானசவுதா அருகே பல ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். கர்நாடகா உயர்நீதிமன்றம், மரங்களில் ரசிகர்கள் ஏறி அமர்ந்தனர். அதுமட்டுமின்றி விதான சவுதா முதல் சின்னச்சாமி மைதானம் வரை ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
ஆனால் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் அளவில் சிறியது. மொத்தம் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். இதனால் ஏராளமான ரசிகர்கள் குவிந்தால் என்ன செய்வது? என்பது பற்றி மாநில அரசும், போலீசாரும் யோசிக்கவில்லை. மாலை 3 மணி நிலவரப்படி போலீசார் தரப்பில் மொத்தம் 50 ஆயிரம் ரசிகர்கள் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் குவிந்து இருப்பதாக கூறினர்.ஆனால் அதன்பிறகு மளமளவென ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தது.
ஆனால் வீரர்கள் திறந்த பஸ்சில் விதானசவுதாவில் இருந்து ஊர்வலம் வரவில்லை. அவர்கள் மூடிய பஸ்சுக்குள் அமர்ந்து மைதானத்துக்கு சென்றனர். இதனால் ஷாக்கான ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை பார்த்துவிட வேண்டும் என்று ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் விதானசவுதா பகுதியில் இருந்து அருகே உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு ஓட்டம் பிடித்தனர்.
மாலை 4 மணிக்கு மைதானத்தின் கேட் 3ன் அருகே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். டிக்கெட் உள்ளவர்கள், டிக்கெட் இல்லாதவர்கள் என இருதரப்பினரும் கேட்டை உடைத்து கொண்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது யாரும் நினைத்து பார்க்காத வகையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி தான் 11 பேர் பலியாகி உள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். திறந்த பஸ்சில் ஊர்வலம் என்று கூறிவிட்டு அது நடத்தப்படவில்லை. ஒருவேளை அது நடந்து இருந்தால் பல ரசிகர்கள் வீரர்களை சாலையில் நின்றே பார்த்துவிட்டு மைதானத்துக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றிருக்கலாம். இப்படி ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கடைசி நேரத்தில் பிளான்கள் மாற்றியது தான் ரசிகர்களை ஒரே இடத்தில் குவிய வைத்து கூட்ட நெரிசலை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications