இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.. பாவம் கர்நாடக மக்கள்! தண்ணீரை காக்க 144 தடையா? வரலாறு காணாத பஞ்சம்
பெங்களூர்: வட கர்நாடக மாவட்டமான ராய்ச்சூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தண்ணீரை பாதுகாப்பாக அணையில் இருந்து நகருக்குள் கொண்டு செல்வதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கிறது. இதன் காரணமாக கால்வாய் வழியாக நகரத்துக்கு தேவையான தண்ணீரை ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் பெற உள்ளது. இந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் 10 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

துங்கபத்ரா அணையின் நீரை துங்கபத்ரா இடது கால்வாய் வழியாக ராய்ச்சூருக்கு கொண்டு செல்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில் தண்ணீரை திறப்பதற்கு முன்பாக அதை பாதுகாப்பாக நகரத்துக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை கிருஷ்ணா நதியில் இருந்து ராய்ச்சூர் நகரத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க கால்வாய் வழியாக துங்கபத்ரா அணையில் இருந்து ராய்ச்சூர் நகரத்துக்கு தண்ணீர் கொண்டு வர மாவ்ட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சுமார் 130 மைல்கள் தொலைவில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து ராய்ச்சூருக்கு நீர் கொண்டு வரப்பட்டது.
துங்கபத்ரா அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் பங்காரப்பா கெரே அணையில் தேக்கி வைக்கப்படும். அதன்பின்னர் ராம்பூர் ஏரிக்கு அது திருப்பி விடப்படும். அதை தொடர்ந்தே ராய்ச்சூர் நகரத்துக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படும். இதுகுறித்து துணை ஆணையர் எல்.சந்திரசேகர் நாயக் தெரிவிக்கையில், "பொறியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தினாலும், பொதுமக்கள் தண்ணீரை திருப்பி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது." என்றார்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். ராய்ச்சூரில் ரேகலமரடி கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் 5 வயது குழந்தை கழிவு நீர் குடித்து உயிரிழந்தது. 30க்கும் அதிகமான மக்கள் வாந்தி எடுத்தும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications