"இப்போ வயிறு எரியுதா.." கூகுள் முதலீடு வந்த கையோடு.. கர்நாடகாவை வம்பிழுத்த சந்திரபாபு நாயுடு மகன்
பெங்களூர்: சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ மையத்தை உருவாக்குவதாக அறிவித்தது. இதற்கிடையே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் கர்நாடகாவை வம்புக்கு இழுத்துள்ளார். ஆந்திர முதலீடுகளைப் பார்த்து கர்நாடகாவுக்கு வயிறு எரிகிறது என்பது போல அவர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கூகுள் நிறுவனம் ஆந்திராவில் ஒரு பிரம்மாண்ட ஏஐ மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பில்லியன் டாலரை கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதலீடு செய்யும் என அறிவிக்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாகவே இது உள்ளது.

சீண்டும் நாரா லோகேஷ்
இது ஆந்திராவுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் கர்நாடகாவைக் கடுமையாகச் சாடியுள்ளார். கூகுள் முதலீடு தொடர்பாக நாரா லோகேஷ் தனது ட்விட்டரில், "ஆந்திர உணவு காரமானது என்பார்கள். எங்கள் முதலீடுகளும் அப்படித்தான்..
சில அண்டை மாநிலங்களுக்கு இதைப் பார்த்தால் ஏற்கனவே வயிறு எரிய ஆரம்பித்துவிட்டது" என்பது போலப் பதிவிட்டுள்ளார். இதுவே இணையத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
முதல்முறை இல்லை
ஆந்திரா கர்நாடகா இடையே மோதல் வெடிப்பது இது முதல்முறை இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரை சேர்ந்த பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜேஷ் யபாஜி, பெங்களூரில் சாலை உட்கட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருந்தார். சாலைகள் மோசமாக இருப்பதால் தங்கள் அலுவலகத்தையே மூடுவதாக அவர் அறிவித்தார்.
அப்போது உடனே விசாகப்பட்டினம் முதலீட்டிற்கான சிறந்த இடமாக இருக்கும்.. எங்கள் ஊருக்கு வாருங்கள் என ராஜேஷ் பாஜிக்கு நாரா லோகேஷ் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அப்போது முதலே இரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் மோதி வருகிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நகரின் உட்கட்டமைப்பு குறித்து அதிருப்தி தெரிவிக்கும்போது ஆந்திர மக்கள் விசாகப்பட்டினத்தைப் பரிந்துரைப்பார்கள். அதற்கு பெங்களூர்வாசிகள் பதிலடி தருவார்கள். இந்த போக்கு தொடர்ந்து வருகிறது.
ஆந்திரா வளர்க்கிறது
சமீபத்தில் கூட நாரா லோகேஷ் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஆந்திரா ஏற்கனவே $120 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் முதலீடுகள் குவிந்து வருகின்றன.. இந்த வேகம் சில அண்டை மாநிலங்களுக்கு பதட்டங்களைத் தூண்டியிருக்கலாம்.. இதற்குக் கவலைப்படும் மாநிலங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதுவே அவர்களின் சவால்" என்று கூறியிருந்தார்.
கர்நாடகா பதிலடி
அதேநேரம் ஆந்திராவுக்குக் கர்நாடக தலைவர்களும் பதிலடி கொடுத்தே வருகிறார்கள். முதலீடு இல்லாமல் தவிப்பதாலேயே ஆந்திரா இதுபோல செய்வதாகக் காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "பெங்களூரின் உள்கட்டமைப்பு, ஸ்டார்ட்அப்கள், மனித வளங்களுக்கு எந்தவொரு நகரமும் ஈடு கொடுக்க முடியாது அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்" என்று கூறியிருந்தார்.
இப்படி கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான் கர்நாடகாவை விமர்சிக்கும் வகையில் நாரா லோகேஷ் இன்று ட்வீட் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications