போலீஸ் கஸ்டடியில் ம.பி. காங். எம்.எல்.ஏக்கள்.. பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகா சிவகுமார் என்ட்ரி
பெங்களூரு: கர்நாடகாவில் போலீசார் கஸ்டடியில்தான் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைக்கும் போதெல்லாம் களத்தில் குதித்துவிடுவார் கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமார். 2017-ல் குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து பாதுகாத்தவர் சிவகுமார்.
பாஜகவுக்கு தலைவலி சிவகுமார்
கடந்த ஆண்டு கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மும்பைக்கு கடத்தி செல்லப்பட்டபோது சிவகுமார் நடத்திய ஓய்வில்லாத போராட்டம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் சிவகுமார் மீது பாஜக கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது. இதன்விளைவாக சிவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
பெங்களூருவுக்கு காங். தலைவர்கள்
இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 19 பேர் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களான இவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி தரப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்படலாம்.
சிவகுமார் எண்ட்ரி
இதனிடையே கர்நாடகா முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமார் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பெங்களூருவில் போலீசாரின் கஸ்டடியில்தான் 19 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர். அவர்களில் பலர் என்னுடன் தொடர்பு கொண்டும் பேசி வருகின்றனர். நிச்சயம் இவர்கள் காங்கிரஸுக்கு திரும்புவார்கள் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிப்போம்
மேலும் போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓஜா கூறுகையில், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏக்கள் முதல்வர் கமல்நாத்துடன் தொடர்பில் உள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியாவின் திடீர் முடிவுகளால் அவர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். கமல்நாத் அரசுக்கு எந்த ஆபத்தும் தற்போது இல்லை. நாங்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என கூறியிருக்கிறார்.