உடுப்பியில் பரபரப்பு! மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்தில்.. பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், உடுப்பியில் மாணவிகள் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரும் எடுத்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பல பியூ கல்லூரிகளும் இதேபோல ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்க தொடங்கியுள்ளன.

கர்நாடகா
கல்லூரிகளின் இந்த அறிவிப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஹிஜாப் அணிந்து வந்த போது யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், இப்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் எனப் புரியவில்லை என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர். முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து, சில இந்து மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்ததால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மர்ம நபர்கள்
ஹிஜாப் தடைக்கு எதிராகக் கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாணவிகள் போராட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெண்கள் போராட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி 5 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நோட்டமிட்டுள்ளனர்.

இருவர் கைது
அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அவர்களில் ரஜப் (41) மற்றும் அப்துல் மஜித் (32) இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 3 பேர் தப்பியோடி விட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது இப்போது கொலை முயற்சி, கலவரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தொடர்பு
இது குறித்து உடுப்பி கூடுதல் எஸ்பி எஸ்.டி. சித்தலிங்கப்பா கூறுகையில், "அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேரைத் தேடி வருகிறோம். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏதேனும் அரசியல் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது எதுவும் தெரியவில்லை.
Recommended Video

அமைச்சர்
இதற்கிடையே சீருடையை அணிய விரும்பாத மாணவிகள் வேறு வழிகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் ராணுவ விதிகளைப் போலப் பள்ளி விதிகள் பின்பற்ற வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பள்ளிக்கு வரும்போது ஹிஜாப் அணிந்து வரலாம் என்றாலும் கூட வகுப்பறைகளில் யூனிபார்ம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications