அரண்டுப்போன மைசூர் அரண்மனை.. 2 தசரா யானைகள் திடீர் மோதல்.. அலறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?
பெங்களூர்: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது ஜம்போ சவாரியில் பங்கேற்கும் யானைகள் மைசூர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2 யானைகள் சண்டையிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர்.
உலக பிரசித்திப்பெற்ற மைசூர் தசரா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கி விஜயதசமி தினமான அக்டோபர் 12ம் தேதி முடிவடைய உள்ளது.

மைசூரு தசரா விழாவில் கடைசி நாளில் நடக்கும் ஜம்போ சவாரி தான் மிகவும் பிரசித்திப்பெற்றது. அன்றைய தினம் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமூண்டேஸ்வரி கோவில் இருந்து சாமூண்டேஸ்வரி அம்மன் சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
இந்த வேளையில் சிலையை சுமக்கும் யானைக்கு பின்னால் பல யானைகள் அணிவகுத்து வரும். இந்த விழாவை காண கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் செல்வார்கள். முன்னதாக மைசூரு தசரா விழாவின்போது மேள சத்தம், பட்டாசு சத்தம் உள்ளிட்டவற்றை கண்டு யானைகள் மிரளாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படும். இதற்காக விழாவில் பங்கேற்கும் யானைகள் முகாமில் இருந்து மைசூர் அரண்மனைக்கு கொண்டு வரப்படும்.
அந்த வகையில் தற்போது மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் மைசூர் அரண்மனையில் தங்க வைத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திடீரென்று 45 வயது நிரம்பிய தனஞ்செயா மற்றும் 26 வயது நிரம்பிய கஞ்சன் என பெயர் கொண்ட 2 யானைகள் இடையே மோதல் ஏற்பட்டது. தனஞ்செயா யானை மீது பாகன் அமர்ந்து இருந்தார். திடீரென்று மோதல் உக்கிரமானது. கஞ்சன் யானை ஓட தொடங்கியது. இதையடுத்து தனஞ்செயா யானை பாகனுடன் கஞ்சன் யானையை விரட்டி சென்றது.
தனஞ்செயா யானையிடம் தப்பிய கஞ்சன் யானை அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயிலை நோக்கி ஓடியது. குறுக்கே இருந்த இரும்பு தடுப்பை உடைத்து சாலையில் ஓடியது. இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக ஓடி வருவதை பார்த்த பொதுமக்கள் பயந்துபோய் சிதறி ஓடினர். அதன்பிறகு பாகன்கள் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 2 யானைகளையும் பிடித்து அமைதிப்படுத்தி அரண்மனைக்குள் அழைத்து சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications