மெட்ரோ எஸ்கலேட்டரிலிருந்து நழுவி சாலையில் விழுந்து அடிபட்ட குழந்தை.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டரிலிருந்து நழுவி சாலையில் விழுந்த குழந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு ராஜாஜி நகர் பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. இவரது 2 வயது மகள் ஹாசினி. நேற்று இவரை அவரது தாத்தா அழைத்துக் கொண்டு ஸ்ரீராமபுரா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். எஸ்கலேட்டரில் குழந்தையை இறக்கி விட்டு மேலே ஏறி வந்துள்ளார்.

குழந்தையின் கையைப் பிடித்தபடி அவர் நின்றுள்ளார். அப்போது கையிலிருந்து குழந்தை எதிர்பாராதவிதமாக கை நழுவி, படிக்கட்டுக்களையும் தாண்டி மகாகாவி குவெம்பு சாலையில் விழுந்துள்ளது. சாலையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் குழந்தையின் தலையில் இடித்து, குழந்தைக்கு தலையில் பலத்த அடிபட்டது. இந்த திடீர் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து சென்ற மெட்ரோ நிலைய அதிகாரிகள் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பின்னர் இந்திரா காந்தி அரசினர் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் டாக்டர்கள்.
இச்சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தை எப்படி எஸ்கலேட்டரிலிருந்து நழுவி விழுந்தது, அந்த அளவுக்கா பாதுகாப்பு மோசமாக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications