கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்.. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!
பெங்களூர்: தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு வினாடிக்கு, 21,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய, ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி, அண்மையில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த மாத இறுதி வரை, தினமும் 1 டி.எம்.சி காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, காவிரி நீரை திறந்துவிட முடியாது எனத் தெரிவித்தார் சித்தராமையா. கர்நாடகாவில் மழை குறைவாக பெய்ததால் தங்களுக்கே தண்ணீர் போதாது என்பதால் தமிழகத்திற்கு திறக்க முடியாது எனக் கூறினார் சித்தராமையா.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து, வினாடிக்கு 21,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மைசூரில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., நேற்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு 6,424 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 19.06 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. அணை நிரம்புவதற்கு, 0.46 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.
கேரளா வயநாட்டில் கனமழை பெய்து வருவதால், அங்கிருந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 19,181 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோன்று, மாண்டியாவில் கே.ஆர்.எஸ் அணைக்கு, நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 3,406 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 2,257 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, வினாடிக்கு 22,257 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுவதும் தமிழகத்துக்கு வருகிறது. கே.ஆர்.எஸ் அணை நீரில், சற்று கால்வாய்களுக்கும், மீதி தமிழகத்துக்கும் வருகிறது.
தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியில் தற்போது வினாடிக்கு 5000 கன அடி வந்துகொண்டு இருக்கிறது. தற்போது கர்நாடக அணையில் 21 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் தகவல் காவிரி டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications