குழந்தைகள்னு கூட பார்க்கல! வயிறு முட்ட குடிச்சிட்டு ஸ்கூல் பஸ் ஓட்டிய 23 டிரைவர்கள் மீது வழக்கு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மது குடித்துவிட்டு பள்ளி வாகனங்களை இயக்கியதாக 23 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெங்களூர் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இது போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவே வாகனங்கள் அவ்வப்போது சோதனைக்குட்படுத்தப்படுகிறது. ஓட்டுநர்களுக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா, வாகனங்களுக்கான பதிவுகள் அனைத்தும் காலாவதியாகாமல் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் பெங்களூரில் நேற்று காலை போலீஸார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணி முதல் 9.30 மணி வரை 3016 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அந்த சோதனையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவ்வாறு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 23 ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் 185ஆவது பிரிவின் கீழ் உடனடியாக குற்றம்சாட்டப்பட்டது.
அவர்களின் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு சாலைகளில் ஆயிரக்கணக்கான பள்ளி வாகனங்கள் சென்று வரும் நிலையில் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.
அப்போது ஓட்டுவதற்கு தகுதிச் சான்றிதழ் இல்லாத 11 வாகனங்களையும் காவல் துறை பறிமுதல் செய்திருக்கிறது. அவை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி பேருந்து ஓட்டுநர்களை பெங்களூர் போக்குவர்தது போலீஸார் சோதனை நடத்துவது இது முதல்முறையல்ல! இந்த சோதனையில் 3414 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் குடித்திருக்கிறார்களா என சோதனை செய்யப்பட்டது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவின்படி (ஐபிசி) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது கிரிமினல் குற்றம். இதற்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குற்றத்தின் தீவிரம் பொருத்து அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். அதனால் அரசும் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications