அதிர்ந்த கர்நாடகம்.. ஹாசன், மண்டியா மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாசன் மற்றம் மண்டியா மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து பீதியுடன் வெளியேறினர்.
கர்நாடகத்தில் ஹாசன், மண்டியா மாவட்டங்கள் உள்ளன. மண்டியா மாவட்டத்தில் கரும்பு விவசாயம் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஹாசன், மண்டியா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஹாசன் மாவட்டத்தில்...
அதாவது இன்று அதிகாலை 4.37 மணிக்கு ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா மாலுகானஹள்ளி, நகரனஷள்ளி, பாடக்யாத்தனஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதாவது மொத்தம் 17 கிராமங்களில் நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் நின்றனர்.

மண்டியா மாவட்டத்தில்...
அதேபோல் மண்டியா மாவட்டம் கேஆர் பேட்டே தாலுகாக கிகேரி அருகே உள்ள மாதாபுரா, கோண்டிஹள்ளி, பன்னேனஹள்ளி கிராமங்களில் அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுபற்றி மாதாபுரா கிராமத்தின் ராமகிருஷ்ணகவுடா கூறுகையில், ‛‛அதிகாலை வேளையில் 2 நிமிடம் வரை பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கத்தை உணர்ந்தோம்'' என்றார்.

3.4 ரிக்டர் அளவு
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீட்டில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்தன. இதனால் கண்விழித்த பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.4 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது.

பாதிப்பு இல்லை
இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் கூறுகையில், " நிலஅதிர்வு வரைபடத்தின்படி இந்த நிலநடுக்கம் மிதமானது. நிலநடுக்க மையத்திலிருந்து அதிகபட்சமாக 40-50 கிமீ தூரம் வரை இந்த நில அதிர்வு உணரப்படலாம். இந்த வகையான நிலநடுக்கம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இப்பகுதி நிலநடுக்க மண்டலம் II ல் உள்ளதால் தீவிர பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை"என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications