அடுக்குமாடி வீட்டில் அஞ்சனா இருந்த கோலம்.. ஆடிப்போன மக்கள்.. 'ஜோதியும் மகளும்' ஜோடியாக செய்த வேலை
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அஞ்சனா 15000 கடன் கொடுத்திருந்தாராம். இந்த 15000 கடனை திரும்ப தர விருப்பம் இல்லாமல் ஜோதியும் அவரது மகள் சுகானி மற்றும் அவரது மகன் ஆகியோர் செய்த செயல் கர்நாடகாவையே ஆடிப்போக வைத்துள்ளது. இப்படியுமா பெண்கள் இருப்பார்கள் என்று அதிர்ந்து போயுள்ளார்கள்.
பெலகாவி மாவட்டம் கேம்ப் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லட்சுமிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அஞ்சனா கடந்த ஏப்ரல் 22-ந் தேதி வீட்டில் அசைவின்றி கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரில் வந்து விசாரித்தனர். அப்போது தான் அஞ்சான உயிருடன் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், அஞ்சனாவை கொலை செய்ததாக தாய், மகள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதானவர்கள் கேம்ப் பகுதியை சேர்ந்த ஜோதி, இவரது மகள் சுகானி மற்றும் ஜோதியின் மகன் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் ஜோதி, அஞ்சனாவிடம் இருந்து கொரோனா சமயத்தில் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
இந்த கடனுக்காக மாதம் தோறும் ரூ.1,500-ஐ அஞ்சனாவுக்கு வட்டியாக அவர் கொடுத்து வந்தார். கடந்த பல மாதங்களாக ஜோதி வட்டி கொடுக்கவில்லை. வாங்கிய கடனையும் திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஜோதி வீட்டுக்கு சென்ற அஞ்சனாவும், அவரது கணவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்து பணம் கொடுப்பதாக ஜோதி கூறியுள்ளார். அதன்படி, அஞ்சனா வீட்டுக்கு ஜோதி, தனது மகள், மகனை அழைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அஞ்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ரூ.15 ஆயிரம் கடன் தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
உடனே ஆத்திரமடைந்த ஜோதி, அஞ்சனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மகள், மகன் ஆகியோர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அஞ்சனா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு 3 பேரும் தப்பிச் சென்றதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் 3 பேர் மீதும் கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு ஜோதி, அவரது மகள் சுகானி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சிறுவன், சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications