பெங்களூரில் கொரோனா உறுதியான 3 ஆயிரம் பேரை காணவில்லை.. மாயமானவர்கள் பரப்பும் வைரஸ்.. அமைச்சர் பகீர்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாவும் அவர்கள் மூலமே கொரோனா பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கர்நாடகாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் கர்நாடகா மாநிலத்தில் 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 229 பேர் பலியாகிவிட்டனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பில் பெங்களூரில் நகர்புறப் பகுதியில் 22,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

3 ஆயிரம் பேர்
இந்த நிலையில் கொரோனா உறுதியான 3 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்களது தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் அசோகா கூறுகையில் 3 ஆயிரம் பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தக்க நடவடிக்கை
கடந்த சில தினங்களாக மாநிலத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் இந்த 3 ஆயிரம் பேர்தான். இவர்கள்தான் கொரோனாவை பரப்பி வருகிறார்கள். விரைவில் இவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஸ்விட்ச் ஆப்
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறுகையில் கொரோனா பாதித்தவர்கள் காணாமல் போவது கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு இலவசமாக மருந்துகளை கொடுக்கிறோம். இதன் மூலம் 90 சதவீதம் பேர் குணமடைகிறார்கள். ஆனால் கொரோனா பாதித்தவர்கள் தங்கள் போனை ஆஃப் செய்து விடுகிறார்கள்.

பாசிட்டிவ்
பின்னர் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஐசியூவில் படுக்கை வசதிகள் கிடைப்பது கடினமாகிறது. இதுதான் இந்த மாநிலத்தில் நடக்கிறது. பெங்களூரை பொருத்தவரை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா பாசிட்டிவ் வந்தவுடன் தங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு வீடுகளை விட்டு சென்றுவிடுகிறார்கள்.

வெளிமாநிலங்கள்
அவர்கள் எங்கே செல்கிறார்கள் என தெரியவில்லை. உங்களை இரு கரம் கூப்பி கேட்கிறேன். கொரோனா பாசிட்டிவ் என வந்தால் போனை ஆஃப் செய்யாதீர்கள், வீடுகளை விட்டு எங்கும் செல்லாதீர்கள். கடைசி நேரத்தில் தீவிர சிகிச்சை பெறுவதை தவிருங்கள். சிலர் வெளிமாநிலங்களுக்கு கூட சென்றுவிடுகிறார்கள். அவர்களை போலீஸார் கண்டுபிடிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications