கர்நாடகா பரபரப்பு: ராஜ்யசபா தேர்தலில் 5-வது வேட்பாளரை திடீரென இறக்கிவிட்ட பாஜக அணி
பெங்களூர்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் 4 காலி இடங்களுக்கு மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் மீண்டும் தீவிரமாகிவிட்டது.
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியானவர்கள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர், ஹனுமந்தய்யா. இவர்களது பதவி காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அஜய் மக்கான், நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். பாஜகவின் வேட்பாளராக நாராயண பாண்டகேவும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இவர்களுடன் சுயேட்சை மன்னன் தமிழ்நாட்டின் பத்மராஜன், மல்லிகார்ஜூன கெங்கனூர் ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திடீரென பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டியும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 இடங்களுக்கு 5 வேட்பாளர்களா போட்டி?: தற்போது வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 20-ந் தேதி கடைசி நாள். சுயேட்சைகளான பத்மராஜன், மல்லிகார்ஜூன கெங்கனூர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இருவருமே களத்தில் இருந்தால் 4 இடங்களுக்கு 5 வேட்பாளர்கள் போட்டி என்கிற நிலைமை உருவாகும். இதனால் ராஜ்யசபா தேர்தலில் வரும் 27-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றாக வேண்டிய நிலைமை வரும்.
தேர்தல் நடந்தால் பரபரப்புதான்: கர்நாடகாவில் ராஜ்யசபா எம்பி வெற்றி பெறுவதற்கு 45 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் அறிவித்த 3 வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெற முடியும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை. கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 66 எம்.எல்.ஏக்களும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். 45 எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ஒரு பாஜக வேட்பாளரை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும். எஞ்சிய 21 பாஜக எம்.எல்.ஏக்கள் பிளஸ் 19 மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதாவது மொத்தம் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தான் உள்ளது. இதனால் பாஜக கூட்டணியின் 5-வது வேட்பாளர் வெற்றி சாத்தியமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் சிலர் உள்ளனர். இதனால் ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியாகும் போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பு நிலவும். இதனால் காங்கிரஸ் கட்சி தற்போதே தமது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. ராஜ்யசபா தேர்தல்களை முன்வைத்து பல மாநிலங்களின் அரசியல் தலைவிதியையே மாற்றிய சரித்திரம் படைத்தது பாஜக. அதனால் கர்நாடகா காங்கிரஸ் அரசு இப்போதே படுதீவிரமாக களமிறங்கிவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications