40% கமிஷன்! பாஜக அவதூறு வழக்கில் ராகுல், சித்தராமையா, டிகே சிவக்குமாருக்கு சிக்கல்.. பறந்த சம்மன்
பெங்களூர்: 40 சதவீத கமிஷன் அரசு என்று பாஜக மீது அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 244 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்னளர்.

இதையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். முன்னதாக கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக மீது காங்கிரஸ் கட்சி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
குறிப்பாக 40 சதவீத கமிஷன் தொகையை ஆளும் பாஜக அரசு பெறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்களை கூறினர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்பட பல முன்னணி தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மேடைக்கு மேடை முழங்கினர். அதோடு தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜகவுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் அரசு என பத்திரிகைகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர்.
இதையடுத்து பாஜகவின் மாநில செயலாளர் எஸ் கேசவபிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு ஆகியோருக்கு எதிராக அவர் மே மாதம் 9 ம் தேதி எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
மனுவில் ‛‛மே மாதம் 5ம் தேதி முக்கிய பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் பாஜக குறித்து தவறான பிம்பத்தை கட்டமைக்க காங்கிரஸ் முயன்றுள்ளது. அந்த விளம்பரத்தில் பாஜக 40 சதவீத கமிஷன் மூலம் ரூ.1.5 லட்சம் கோடியை 4 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய தண்டனை சட்டம் 499 (அவதூறு) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 500 (அவதூறுக்கான தண்டனை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 27 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏற்கனவே மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வராக உள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications