இஸ்லாமுக்கு மாறுங்க.. பெங்களூரில் 48 பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இ-மெயிலில் இருந்தது என்ன?
பெங்களூர்: பெங்களூரில் உள்ள 48 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இன்று காலையில் திடீரென்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயில் முகவரி மற்றும் அந்த இ-மெயிலில் இருந்த திடுக்கிட வைக்கும் தகவல் குறித்த விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கின. காலை முதல் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில் தான் திடீரென்று பெங்களூரில் உள்ள 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதாவது பெங்களூரில் எலகங்கா, பசவேஸ்வரா நகர் உள்பட பல இடங்களில் உள்ள 48 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மெயில் காலை 10.05 மணியளவில் அந்தந்த பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகளுக்கு சென்றது.
இதனை பார்த்த பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கியது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கும் சென்றது. இதனால் அவர்களும் பள்ளிகள் முன்பு குவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சென்று அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். அப்போது வெடிகுண்டு உள்பட வெடிக்கும் தன்மை கொண்ட எந்த பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது. இதன்மூலம் அந்த இ-மெயில் மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெங்களூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பற்றிய தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் இ-மெயில் குறித்த திடுக்கிட வைக்கும் விபரம் வெளியாகி உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது Kharijites என்ற பெயரிலான இ-மெயில் முகவரியில் இருந்து வந்துள்ளது. மேலும் அந்த இ-மெயிலில் கூறப்பட்டு இருந்ததாவது:
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வெடிபொருட்கள் உள்ளன. நவம்பர் 26ம் தேதி (மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்) அல்லாவின் பாதையில் தியாகிகள் நூற்றுக்கணக்கான உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றனர். நீங்கள் அல்லாவின் எதிரிகளாக இருந்தால் உங்களையும், உங்களின் குழந்தைகளையும் கொன்று விடுவோம்.
புத்த மதம் முதல் பிற மத உருவ வழிபாடுகளை கைவிட வேண்டும். நீங்கள் எங்களின் அடிமைகளாக உண்மையான மதத்தை ஏற்று கொள்ள வேண்டும். உருவ வழிபாட்டை புறக்கணிக்க வேண்டும். அதோடு அல்லாவின் உண்மையான மார்க்கத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்.நீங்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமின் வாளுக்கு பதில் சொல்லி இறக்க நேரிடும். அல்லாஹூ அக்பர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications