பூமிக்கு வந்து 6 மாதம்தான் ஆச்சு! காது குத்த மயக்க ஊசி போட்டதில் ஆண் குழந்தை பலி!
பெங்களூர்: பெங்களூரில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தியதால் வாயில் நுரை தள்ளியபடி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டையை அடுத்த ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் ஆனந்த் - சுபா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அந்த குழந்தைக்கு காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி ஏதாவது போட்டுக் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்த மருத்துவர் நாகராஜு , குழந்தையின் இரு காதுகளின் மடல்களிலும் மயக்க மருந்து ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ 200 கட்டணமாக வசூலித்தாராம். குழந்தைக்கு போட்ட ஊசியில் மயக்க மருந்து அதிக வீரியம் கொண்டதாக தெரிகிறது.
இதனால் குழந்தையின் வாயில் நுரை வந்து மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தாலுக்கா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பெற்றோரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நியாயம் கேட்டனர். மேலும் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊசி போட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்ய வேண்டும், குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், சளி, இருமல், பல் வலி, கால்வலி, வயிறு வலி உள்ளிட்ட எது வந்தாலும் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அனைத்து மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஒரு மருத்துவரே குழந்தையின் பலிக்கு காரணமாக அமைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காது குத்துவதற்காக குழந்தைக்கு மயக்க ஊசி போட்ட நிலையில் 6 மாத குழந்தை பலியான சோகம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications