தலித் மக்களின் குடிசை எரிப்பு.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை! கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 2014ம் ஆண்டு தலித் மக்களின் குடிசை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் தலித்/பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

பின்தங்கிய மாவட்டம்: அதாவது கடந்த 2014ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் மருகும்பி கிராமத்தில் தலித் மக்களின் குடிசை எரிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த மாவட்டம் கர்நாடகாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். சமீபத்தில் இங்குள்ள கோயிலுக்குள் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நுழைந்திருக்கிறான். இதற்காக அந்த சிறுவனின் தந்தையை தாக்கிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள், ரூ.25,000ஐ அபராதமாகவும் விதித்திருந்தனர். அப்படியெனில் இந்த மாவட்டம் எந்த அளவுக்கு பின்தங்கி இருக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
வழக்கின் விவரம்: கடந்த 2014ம் ஆண்டு நடந்த வன்முறையில் தலித் மக்களின் மூன்று குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டிற்குள் இருந்த ஆண்களும், பெண்களும் வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்துவரப்பட்டு தாக்கப்பட்டனர். மொத்தம் 30 தலித் மக்கள் இந்த வன்முறையில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை வெடித்தது. அரசியல் தலைவர்கள் கொப்பல் மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
படுகொலை: தலித் தலைவர் வீரேஷ் மருகும்பி, வன்முறையை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கொப்பல் மாவட்டத்திலிருந்த பெங்களூரு நோக்கி பேரணி நடத்தினார். ஆனால் இது நடந்து சில நாட்கள் கழித்து கொப்பல் ரயில் நிலையம் அருகே அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். குடிசை எரிப்பு வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு குறித்து நீதிபதி சி.சந்திரசேகர் கூறுகையில்,
தீர்ப்பு: "மருகும்பி மாவட்டத்தில் நடந்தது சாதாரண வன்முறை கிடையாது, இது சாதிய வன்முறை. மொத்தம் 117 பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. இதில் 101 குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கிறேன். இவர்களில் 98 பேருக்கு தலா ரூ.5000 அபராதத்துடன் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு தலா ரூ.2000 அபராதத்துடன் 5 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகள் அனைவரும் சாதாரண பொருளாதார பின்புறத்தையே கொண்டிருக்கின்றனர். எனவேதான் அவர்களுக்கு அபராதம் குறைவாக விதிக்கப்பட்டிருக்கிறது. அதிக அபராதத்தை விதித்து அதை பெறுவதில் எந்த பலனும் கிடையாது. அதே நேரம் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள். காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் மீது இவர்கள் பாரபட்சம் இன்றி ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
கற்களாலும், கம்புகளாலும் இந்த மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். சுயமரியாதையை இழந்திருக்கிறார்கள். இவ்வளவு அநீதிகளை சந்தித்த மக்களுக்கு ஆதரவாக நிற்பதே நீதி. இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையை குறைத்து வழங்கினால் அது நீதியை கேலி செய்யும் செயல். எனவேதான் உட்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தலித் மக்களின் குடிசையை கொளுத்தியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications