கர்நாடகாவில் புதிதாக ஒரு மத சர்ச்சை.. துப்பாக்கி முனையில் முஸ்லீமாக மதம் மாற்றியதாக வாலிபர் புகார்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹூப்பளி மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் தன்னை துப்பாக்கி முனையில் 12 பேர் கொண்ட கும்பல் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்பளி மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் இளைஞர், துப்பாக்கி முனையில் மிரட்டி 12 பேர் கொண்ட கும்பல் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
40% கமிஷன்.. கர்நாடக முதல்வருக்கு எதிராக PayCM போஸ்டர்.. பெங்களூரில் கிழித்து அகற்ற அதிரடி உத்தரவு
மதம் மாற வைத்தனர்
கடந்த மே மாதம் பெங்களூர் தெற்கு பகுதியில் உள்ள பனஷன்கரி மசூதியில் வைத்து தன்னை 12 பேர் கொண்ட கும்பல் மதம் மாற்றியதாக ஸ்ரீதர் கங்காதர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரையடுத்து எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் கடும் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக கூறும் கங்காதர் தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தையும் விவரித்தார்.
மாட்டிறைச்சி உண்ண வைத்தனர்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''கட்டாயமாக என்னை நமாஸ் செய்ய வற்புறுத்தியதோடு மதசடங்குகளையும் பின்பற்ற வைத்தனர். எனது விருப்பத்தை மீறி மாட்டிறைச்சியையும் உட்கொள்ள வைத்தனர். மேலும் 3 இந்துக்களையும் முஸ்லீம் மதத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் என்னை நிர்பந்தித்தனர். மேலும் என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டினர். பின்னர் துப்பாக்கியுடன் நின்று கொண்டு போஸ் கொடுக்க வைத்த அந்த நபர்கள், தீவிரவாதி என சித்தரித்து படங்களை வெளியிட்டு விடுவோம் என்றும் எச்சரித்தனர்.
ஹூப்ளிக்கு
நிதி நெருக்கடியில் தவித்த போது நான் எனது மோசமான நிலையை ஒருவரிடம் கூறினேன். அந்த நபர்தான் என்னை சிலரிடம் அழைத்து சென்றார். அங்கிருந்தவர்கள் எனது செல்போனை பிடுங்கி கொண்டு போனில் இருந்து 35 ஆயிரம் ரூபாயை டிரன்ஸ்பர் செய்து விட்டனர். மேலும் பல இடங்களுக்கு தன்னை அழைத்துச்சென்றதாகவும், ஹூப்ளிக்கு கடந்த 9 ஆம் தேதிதான் திரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.
இந்து அமைப்புகள் கண்டனம்
ஸ்ரீதர் கங்காதர் அளித்த புகாரின் படி 12 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் குறித்து விசாரணை நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீதர் கங்காதார் அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சில இந்து அமைப்புகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குரல்கள் கொடுத்துள்ளன.