பைக் விற்றவர் ஆர்சிபுக்கில் செய்த சிறு தவறு.. 47 லட்சம் பறிபோகிறது.. வாகன உரிமையாளர்களுக்கு பாடம்
பெங்களூர்: விபத்து ஏற்பட்டால் பெயர் மாற்றப்படும் வரை மோட்டார் சைக்கிள் உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் சுனில்குமார் என்பவர் வாகனம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விரிவாக பார்ப்போம்.
பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். பிறகு அதை சப்ரீஸ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த வண்டியின் உரிமையாளராக சுனில்குமாரின் பெயரே இருந்து வந்துள்ளது. பைக் வாங்கிய பின்னர் ஆவணங்களில் உரிமையாளர் பெயர் மாற்றப்படவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி அந்த மோட்டார் சைக்கிள் மோதி பெங்களூருவைச் சேர்ந்த ஹனுமந்த் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.33 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அதை சுனில்குமார், சப்ரீஸ் ஆகிய 2 பேரும் சேர்ந்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சுனில்குமார், சப்ரீஸ் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூடுதல் நிவாரணம் கேட்டு மனு தாக்கல் செய்தார்கள்.
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் பண்டித், அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளராக உள்ள சுனில்குமார்தான் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டை ரூ.47.15 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், சப்ரீஸ் அந்த மோட்டார் சைக்கிளை வாங்கி இருந்தாலும் உரிமையாளர் பெயர் மாற்றப்படும் வரை ஆவணங்களில் உள்ள உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சட்டத்தின் பார்வையில் விரிவாக பார்ப்போம். ஆர்.சி புத்தகத்தில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவரே அந்த வாகனத்தின் "உரிமையாளர்". எனவே நீங்கள் வண்டியை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும், அரசு ஆவணங்களில் பெயர் மாற்றப்படாதவரை சட்டப்படி நீங்களே பொறுப்பாளி. எனவே கர்நாடகாவில் நடந்த சம்பவம் போல், வண்டியை வாங்கியவர் விபத்து ஏற்படுத்தினால், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய பல லட்ச ரூபாய் இழப்பீட்டைத் தர வேண்டிய கட்டாயம் ஆர்.சி புத்தகத்தில் பெயர் இருக்கும் பழைய உரிமையாளருக்கே வரும்.
காப்பீடு காலாவதியாகி இருந்தாலோ அல்லது முறையாக மாற்றப்படாமல் இருந்தாலோ, அந்தப் பெரும் தொகையை உங்கள் சொந்தப் பணத்திலிருந்து தர வேண்டிய நிலை வரும். நீங்கள் விற்ற வாகனம் ஏதேனும் திருட்டு, கடத்தல் அல்லது தீவிரவாதச் செயல்களில் பயன்படுத்தப்பட்டால், காவல்துறை முதலில் ஆர்.சி புத்தகத்தில் உள்ள முகவரிக்குத்தான் வரும். நீங்கள் வண்டியை விற்றுவிட்டீர்கள் என்பதை நிரூபிப்பது மிகக் கடினமான மற்றும் மன உளைச்சல் தரும் விஷயமாகிவிடும்.
இப்போது பல இடங்களில் தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. வண்டியை வாங்கியவர் விதிகளை மீறினால், அபராதச் சலான் உங்கள் வீட்டு முகவரிக்கு அல்லது உங்கள் மொபைல் எண்ணிற்குத்தான் வரும்.
படிவம் 29 மற்றும் 30 (Form 29 & 30): வாகனத்தை விற்கும்போது இந்தப் படிவங்களில் வாங்குபவரிடம் கையெழுத்து வாங்கி, உடனடியாக சம்பந்தப்பட்ட RTO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வி வண்டியை விற்ற தேதி, நேரம் மற்றும் வாங்குபவரின் அடையாளச் சான்றுகளுடன் ஒரு விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது (ஆனால் இது ஆர்.சி மாற்றத்திற்கு இணையான பாதுகாப்பு இல்லை). வாகனப் பெயரோடு சேர்த்து காப்பீட்டையும் (Insurance) புதியவர் பெயருக்கு மாற்ற ஊக்குவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications