கன்னடம் தெரியாமல் பெங்களூரில் வாழக் கூடாதா? இந்தி பேசிய பழ வியாபாரி.. பெங்களூர் பெண் செய்ததை பாருங்க
பெங்களூர்: பெங்களூருக்கு வந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் கன்னடத்துக்கு பதில் இந்தியில் பேசிய அன்னாசி பழ வியாபாரி கன்னடம் பேசும் பெண்ணிடம் சிக்கி கொண்டார். இந்த வியாபாரியை அந்த பெண் எப்படியெல்லாம் துன்புறுத்தினார்? என்பதை சமூக வலைதளத்தில் ஒருவர் உருக்கமாக விளக்கி உள்ளதோடு, பெங்களூரில் வசிப்போர் கன்னடம் தெரியாத இந்தி பேசும் வடமாநில தொழிலாளர்களுக்கு கொஞ்சம் அன்பு காட்டலாமே? என்று கூறியுள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது நம்மில் பலரும் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்று பணியாற்றி வருகிறோம். இந்த சமயங்களில் அந்த நாட்டு, அந்த மாநிலத்தில் பேசப்படும் மொழி தெரியாத நிலை ஏற்படும். குறிப்பாக நம்மில் பலரும் வடமாநிலங்கள் சென்றால் ஹிந்தி தெரியாமல் ஆங்கிலத்தில் பேசுவதும், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு வந்தால் தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் தெரியாமல் ஹிந்தியில் பேசுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கன்னடம் தெரிய வேண்டும். அவர்கள் எப்படியாவது கன்னட மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று கன்னட அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் கன்னடம் பேச தெரியாதவர்களிடம் வாக்குவாதம் செய்வதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் கன்னடம் பேச தெரியாத இந்தி மட்டுமே தெரிந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்னாசி பழ வியாபாரி எதிர்கொண்ட பிரச்சனையை பற்றி ஒருவர் தனது ‛ரெடிட்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெங்களூரில் வசிக்கும் மக்கள் இந்தி பேசும் மக்களிடம் கொஞ்சம் கனிவு கட்ட வேண்டும் என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Can we be a little Kind?(கொஞ்சம் அன்பாக இருக்கலாமா?) என்ற தலைப்பில் அந்த பதிவு என்பது தொடங்குகிறது. மேலும் அந்த ‛ரெடிட்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: பெங்களூர் இஸ்ரோ லே-அவுட்டில் நான் இன்று அன்னாசிபழம் வாங்கினேன். அந்த அன்னாசி பழ வியாபாரி வடஇந்தியாவை சேர்ந்தவர். இதனால் ஹிந்தியில் உரையாடினேன். அப்போது அங்கு பெண் ஒருவர் வந்தார். அவர் அன்னாசிபழ வியாபாரியிடம் விலை பற்றி கேட்டார். அதற்கு வியாபாரி இந்தியில் ஒரு பீஸ் ரூ.40, 3 பீஸ் என்றால் ரூ.100 என்று கூறினார். ஆனால் அந்த பெண்ணுக்கு புரியவில்லை என்று மறுபடியும் கேட்டார். 3 முதல் 4 முறை அந்த வியாபாரி திரும்ப திரும்ப இந்தி மொழியில் விலையை கூறினார். ஆனாலும் அந்த பெண் புரியவில்லை என்றே கூறி வந்தார்.
இந்த வேளையில் நான் குறுக்கிட்டு கன்னட மொழியில் விலையை கூறினேன். இதற்கு நன்றி சொல்லாத அந்த பெண் அன்னாசிபழ வியாபாரியை திட்டினார். கன்னடம் கற்று கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டி திட்டினார். இதையடுத்து அந்த அன்னாசிபழ வியாபாரி பயந்து போனார். மேலும் நான் பெங்களூர் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. விரைவில் கன்னடம் கற்று கொள்கிறேன் என்று பயந்தபடி கூறினார்.
இந்த சம்பவத்தில் கன்னட மக்கள் கன்னடம் கற்று கொள்ள வேண்டும் என்று கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கன்னடம் தெரியாமல் இருப்பதற்காக திட்டுவது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோன்ற வியபாரிகள் காலப்போக்கில் கன்னடம் கற்று கொள்வார்கள். மேலும் நாமும் அவர்கள் சொல்வதை நன்கு கேட்டால் புரிந்து கொள்ளலாம். புரியாவிட்டால் கொஞ்சம் அன்பாக கேட்கலாம்'' என தெரிவித்தார்.
தற்போது இந்த பதிவு என்பது வைரலாகி உள்ளது. பலரும் இந்த பதிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் பெங்களூரை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்ய தொடங்கினர். இதுதொடர்பாக ஒருவர், ‛‛பெங்களூரில் உள்ள ஒவ்வொருவரும் தற்போது உணர்வற்றவர்கள் போல் உள்ளனர். இதற்கு அந்த ஏழை வியாபாரி என்ன செய்ய முடியும். அவர்களால் புதிய மொழியை உடனே கற்க முடியவில்லை. மொழியை கற்க வழியும் இல்லை. இது ஒரு உயர் ஹைகிளாஸ் மைண்ட்செட் போல் இருக்கிறது'' என்றார்.
இன்னொருவர்,‛‛பெங்களூரில் கன்னடம் கற்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் கன்னடம் கற்றுத்தர யாரும் முன்வருவது இல்லை. புத்தக கடைகளில் ஆங்கிலத்தில் இருந்து கன்னடம் கற்பது தொடர்பான புத்தகம் இல்லை. ஆன்லைனில் இ-கோர்ஸ் மூலம் என்னால் கற்க முடியும். ஆனால் ஆங்கிலம் கூட சரியாக தெரியாத ஒரு சாதாரண மனிதன் என்ன செய்வான்?
இடம்பெயர்ந்து வேலைக்காக வருவோர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் போல் கன்னடம் பேச வேண்டும் என்று உள்ளூர்காரர்கள் நினைக்கின்றனர். என்னுடன் வேலை செய்யும் உள்ளூர்காரர்களிடம் கேட்டால் ஆங்கிலம் மட்டும் போதும் என்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் கன்னடம் கற்கும் வாய்ப்பு எங்கு உள்ளது?'' என விமர்சனம் செய்தார்.
அதேபோல் மற்றொருவர், ‛‛நான் பெங்களூரில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்தேன். ‛கன்னடா கொத்தில்லா' (தமிழில் கன்னடம் தெரியவில்லை) என்ற கன்னட வார்த்தைகளை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் கடந்த 3 மாதங்களாக ஆனேக்கல் (பெங்களூர் புறநகர் பகுதி) பகுதியில் இருக்கிறேன். இப்போது பெரும்பாலான கன்னட வார்த்தைகளை என்னால் புரிந்து கொண்டு பேசவும் முடிகிறது. சரளமாக பேச முடியாவிட்டாலும் கன்னடத்தில் என்னால் நன்றாக பேச முடியும்.
பெங்களூரில் உள்ள அனைவரும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை கன்னடம் கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் யாருக்கும் கற்றுக்கொடுக்க தயாராக இல்லை. அதேவேளையில் நான் இவ்வளவு காலம் சென்னையில் வசித்து இருந்தால் நான் அந்த மாநில மக்கள்போல் நன்றாக தமிழ் பேச கற்றிருப்பேன்'' என்று தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.












Click it and Unblock the Notifications