‛‛மீண்டும் பெரியார் பாடம்’’..பாஜக நீக்கியதை மீண்டும் கர்நாடகா பள்ளி புத்தகத்தில் சேர்த்தது காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்காலத்தில், பள்ளி பாடத்திட்டத்திலிருந்து திப்பு சுல்தான், பெரியார் உள்ளிட்டோர் குறித்த பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பாஜக அரசு நீக்கியது. இதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகளை பாஜக அரசு புகுத்தியது.

ஏற்கெனவே திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை கொண்டாட பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பாஜக அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு, கர்நாடக அரசின் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.
இந்த பரிந்துரையின்படி, 6ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் LGBTQI+ குறித்த பாடதிட்டத்தை சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது. அதேபோல, 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'மதம்' என்ற வார்த்தை 'தர்மம்' என்று மாற்ற வேண்டும் என்றும், 8ம் வகுப்பில், வரலாறு 'வீரசைவ பந்தாவின் மதிப்புகள்' என்பதற்குப் பதிலாக 'பசவாடி சரணங்களின் மதிப்புகள்' என்று மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 9ம் வகுப்பு பாட திட்டத்தில் பக்தி இயக்கத்திற்கு கனகதாசர், புரந்தர தாசர் மற்றும் சிசுனால ஷரீபா ஆகியோரின் பங்களிப்புகளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கூடுதலாக, பள்ளி பாடத்தில் கன்னட இலக்கியம் மற்றும் கலாச்சாரத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சாவித்திரிபாய் பூலே மற்றும் பெரியார் பற்றிய பாடங்களும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கிரீஷ் கர்னாட், தேவனூர் மகாதேவம், பி லங்கேஷ், முட்னாகுடு சின்னசாமி மற்றும் நாகேஷ் ஹெக்டே ஆகியோரின் அத்தியாயங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த பாடங்களை இக்குழு பரிந்துரைக்கவில்லை. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2024-25 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களில் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications