பெங்களூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்.. பேருந்துக்காக காத்திருந்தபோது கொடூரம்
பெங்களூரு: பெங்களூரில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை என பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, வன்கொடுமை, சீண்டல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளுமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறி வருகின்றன.

சமீபத்தில் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் பேருந்துக்காக காத்திருந்த தமிழக பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பேரிகை பகுதி அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் (37), ஒருவர் ஜனவரி 19 ஆம் தேதி அன்று இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசுப் பேருந்து மூலமாகச் சென்றுள்ளார். பெங்களூர், டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து எலஹங்கா பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்குச் செல்வதற்காக டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இரவு 11.30 மணியளவில் காத்திருந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு ஆண்களிடம் அந்தப் பெண் எலஹங்கா பகுதிக்குச் செல்லும் பேருந்து எங்கு வரும் என்று கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இரண்டு ஆண்களும் பேருந்து வரும் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ் 27, சரவணன் 35 இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications