எனக்கு 15 வயசுதான்! என் உணர்வுகளை கருத்தில் கொள்ளாதது ஏன்? நடிகர் தர்ஷன் மகன் உருக்கம்
பெங்களூர்: 15 வயதான எனது உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் தந்தையை பற்றிய உங்களின் மோசமான வார்த்தைகளுக்கு நன்றி என கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் மகன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 15 வயதான எனது உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் எனது தந்தை குறித்து உங்களின் மோசமான கருத்துகளுக்கும் புண்படுத்தும் வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அம்மா, அப்பா இருவரின் ஆதரவும் அரவணைப்பும் இந்த டீன் ஏஜில் தேவைப்படும் இந்த இக்கட்டான சூழலில் கூட என்னை திட்டும் உங்கள் யாரையும் மாற்ற முடியாது என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தர்ஷன் மகனின் இன்ஸ்டாகிராம் கணக்கை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
பின்னணி என்ன? கர்நாடகாவை சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி, சித்ரதுர்காவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா லே அவுட்டில் வசித்து வந்தார். இவர் அங்குள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அண்மையில்தான் திருமணமான நிலையில் இவரது மனைவி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த விரிசலுக்கு பவித்ரா கவுடா தான் காரணம் என்று ரேணுகாசாமி கருதி இருக்கிறார். இதனால் பவித்ரா குறித்து அவர் ஆபாசமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது ஆபாச போட்டோகளையும் பவித்ராவுக்கு ரேணுகாசாமி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ரேணுகாசாமியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த பவித்ரா, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் சித்ரதுர்காவில் உள்ள தர்ஷன் ரசிகர்கள் மன்ற தலைவர் ராகவேந்திராவை தொடர்பு கொண்டுள்ளார். ரேணுகாசாமியை கண்டுபிடிக்க அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 8-ஆம் தேதி பவித்ராவுக்கு ஆபாச போட்டோக்களை அனுப்பிய ரேணுகாசாமியை கண்டுபிடித்துள்ளனர். தர்ஷனை சந்திக்கலாம் என்று கூறியே ரேணுகாசாமியை சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பராக அறியப்படும் வினய் என்பவருக்குச் சொந்தமான இடத்திற்கு ரேணுகாசாமி கொண்டு செல்லப்பட்டார்.
அன்றைய தினம் இரவு 7 மணியளவில் அந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் வருவதும் பிறகு விடியற்காலை 3 மணிக்கு அங்கிருந்து வெளியேறுவதும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ஆகியோர் இணைந்து ரேணுகாசாமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பவித்ரா அவரை செருப்பால் அடித்ததாகவும் மறுபுறம் தர்ஷன் பெல்ட்டை வைத்து கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உடன் இருந்தவர்கள் இரும்பு ராட், தடி, மரக் கட்டைகளைக் கொண்டு ரேணுகாசாமியை தாக்கியுள்ளனர். இறுதியில் அவரை தூக்கி சுவரில் எரிந்துள்ளனர். தலை பலமாக சுவரில் மோதிய நிலையில், ரேணுகாசாமி அங்கேயே உயிரிழந்தார். அவரது சடலத்தை காமாட்சிபாளையத்தில் உள்ள வாய்க்காலில் வீசியதாக தெரிகிறது.
இந்த கொலை வழக்கில் தர்ஷனும் அவரது தோழி பவித்ராவும் ஜூன் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் தர்ஷன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் கொலை பழியை ஏற்றுக் கொள்ள 3 பேருக்கு ரூ 15 லட்சம் பணத்தை தர்ஷன் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications