ஜெ. சொன்ன மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. மறக்காத சசிகலா.. விரைவில் மக்களை சந்தித்து "முறையீடு"?
பெங்களூரு: சசிகலா விரைவில் மக்களை சந்திப்பார் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை ஆனார். அவருக்கான அபராதத் தொகை 10 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்று முழுவதும் நீங்கி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பெங்களூர்
தற்போது பெங்களூரில் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார். இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இளவரசி விடுதலை செய்யப்பட்டார். அவரை அழைத்து வர பெங்களூர் சென்றிருந்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தண்டனை
அவர் கூறுகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகியுள்ளனர். சுதாகரனுக்கு அபராதத் தொகையை செலுத்த தாமதம் ஆகியுள்ளது. விரைவில் அவரும் விடுதலை செய்யப்படுவார். சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான போது அவர்களது நன்னடத்தை சான்றிதழில் இருவரின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விதிகள்
அதிமுகவின் கொள்கைகள் மற்றும் விதிகளில் அதிமுக தொண்டர்கள் மட்டும்தான் கட்சிக் கொடியை பயன்படுத்த வேண்டும் என கூறப்படவில்லை. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு தற்போது சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சசிகலா காரில் அதிமுக கொடியை கட்டிச் சென்றதும் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியதும் தவறு இல்லை.

குடும்பத்தினர்
சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்கியதாக எந்த நிர்வாகியும் கூறவில்லை. சசிகலா அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என கூறியுள்ளனர். அவர் சிறையில் இருக்கும் போது எப்படி புதுப்பிக்க முடியும்? அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள சசிகலா மக்களையும் சந்திப்பார். விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வரும். உள்கட்சி பிரச்சினைக்குள் தேர்தல் ஆணையம் செல்லாது என நம்புகிறேன் என்றார் வழக்கறிஞர்.












Click it and Unblock the Notifications