அடிதூள்.! சென்னைக்கு அடுத்து இப்போது பெங்களூரில்.. வருகிறது 2ஆவது ஏர்போர்ட்! வந்தாச்சு ஹேப்பி நியூஸ்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இரண்டாவதாக ஒரு விமான நிலையத்தை அமைப்பது குறித்து அம்மாநில அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய விமான துறை வரும் காலங்களில் மேலும் வேகமாக வளர்ச்சியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான துறையில் பல்வேறு முதலீடுகள் குவிந்து வருகிறது. பல விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது.

கர்நாடக தலைநகர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இப்போது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இருப்பினும், அங்கே விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் விமான நிலையத்தில் கடும் கூட்டம் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சியாகப் பெங்களூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கக் கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில தொழில் துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் புறநகர் ரயில் திட்டம் பெங்களூரில் நிலவும் டிராபிக்கை கணிசமாகக் குறைக்க உதவும் எனத் தெரிவித்த அவர், அதேநேரம் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், நகருக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஏர்போர்ட்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பெங்களூரில் கனெக்டிவிட்டி தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. தற்போது பெங்களூரின் டிராபிக் இதைச் சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம். நகரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். முன்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இடத்தில் பிராந்திய விமானங்கள் உள்ளிட்ட சிறிய விமானங்களைக் கையாளலாம் என யோசித்தோம்.

அந்த முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் தான் இருக்கிறது. அடுத்த கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்வோம். அதேநேரம் இந்தத் திட்டம் ஒத்துவரவில்லை என்று அடுத்தகட்டம் குறித்து ஆலோசிக்க வேண்டும். 150 கிமீ தொலைவிற்குள் புதிய ஏர்போர்ட்டை அமைக்கக் கூடாது என்ற விதி இருப்பதால் அது குறித்தும் யோசித்து முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை எந்தவொரு நகரத்திலும் இரண்டு விமான நிலையங்கள் இல்லை. முதல் முறையாகச் சென்னையில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடுத்து, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் பெங்களூரிலும் இரண்டாவது ஏர்போர்ட் அமைப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மற்ற நடவடிக்கைகள்: தொடர்ந்து பெங்களூர் புறநகர் ரயில் பணிகள் குறித்துப் பேசிய அவர், "நகரில் டிராபிக் பிரச்சினையைக் குறைப்பதில் இந்த புறநகர் ரயில் மிகப் பெரிய உதவியாக இருக்கும். புறநகர் ரயிலை மைசூர், துமகுரு, கௌரிபிதனூர், கோலார் வரை நீட்டிக்கும் திட்டமும் இருக்கிறது.
புறநகர் ரயில் திட்டத்தை இரண்டு கட்டங்களாக ஆரம்பிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். நீட்டிப்புகள் குறித்து 2வது கட்டத்தில் பரிசீலிக்கப்படும். மேலும், பெரிஃபெரல் ரிங் ரோடு வழியாக circular வழித்தடங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம் குறித்துப் பேசிய அவர், "அடுத்தகட்டமாக நாம் வளர வேண்டும். இதற்காக நான் பல ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறேன். தொழில்துறைகளுக்குச் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு கர்நாடகாவில் இருக்கிறது. ஐடி மற்றும் சேவைகள் துறையில் நாம் முன்னிலையில் உள்ளோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் உற்பத்தித் துறையில் நாம் பின்தங்கியுள்ளோம். உற்பத்தித் துறையை வளர்க்கக் கவனம் செலுத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications