தண்ணீர் கசிவை கண்டறிய ரோபோ தொழில்நுட்பம்.. சாலையை தோண்ட வேண்டாம்! பெங்களூர் குடிநீர் வாரியம் அசத்தல்
பெங்களூர்: பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) நகரின் குடிநீர் குழாய் பராமரிப்பிற்காக, அதிநவீன 'ரோபோடிக் ஆய்வு தொழில்நுட்பத்தை’ அறிமுகப்படுத்தியது. இது நிலத்தடி குழாய் குறைபாடுகளைத் துல்லியமாக கண்டறிந்து, பல பிரச்சனைகளுக்குப் புரட்சிகரமான தீர்வை வழங்கியுள்ளது.
இத்தொழில்நுட்பம், 38 இடங்களில் சாலை தோண்டும் தேவையை நீக்கி, வாரியத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் சேமித்துள்ளது. இது குறைபாடுகளை விரைவாக கண்டறிவதுடன், சாலை தோண்டுவதால் ஏற்படும் போக்குவரத்து, தூசி, ஒலி மாசு போன்ற பொதுமக்கள் சிரமங்களையும் குறைத்து, சேமித்த நிதியை பிற பணிகளுக்கும் பயன்படுத்த வழிவகை செய்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின்படி, ரோபோடிக் கேமரா அமைப்புகள் மூலம் ஊழியர்கள், குழாய் குறைபாடுகளை ஆய்வு செய்கின்றனர். இதுவரை, 75 புகார்களுக்கு 67 இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் முடிந்துள்ளன. 93க்கும் மேற்பட்ட குறைபாடுகளும் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளன. இது சேவைகளை விரைவாக மீட்டெடுத்து, தொழிலாளர் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
ஐஐடி-மெட்ராஸ் மற்றும் அதன் ஸ்டார்ட்அப்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ அமைப்பு, மத்திய வால்வு அணுகல் (Central Valve Access - CVA) வலையமைப்பைச் சுத்தம் செய்து ஆய்வு செய்வதுடன், குடிநீர்க் குழாய்களில் உள்ள கசிவுகளையும் துல்லியமாக அடையாளம் காணும்.
BWSSB தலைவர் ராம் பிரசாந்த் மனோகர் IAS இதுபற்றி கூறுகையில், "தண்ணீர் கசிவைக் கண்டறிய, நாங்கள் குழாய்க்குள் ஒரு ரோபோவை அனுப்புவோம். அது தவறு நடந்த சரியான இடத்தைச் ஸ்கேன் செய்து துல்லியமாகக் குறிக்கும். இது உடனடி பழுதுபார்ப்புக்காக நிகழ்நேரத்தில் (real time) கண்காணிக்கப்படும்".
பொம்மை கார் அளவில் இருக்கும் இந்த ரோபோக்கள், உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் (high-definition cameras) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு பகுப்பாய்வுக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
இவை குழாய்க்குள் 500 மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.அதிக நீர் அழுத்தத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டது. குறுகிய இடைவெளிகளிலும் இலகுவாகச் செல்லக்கூடியது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்த அமைப்பு நீர்க் கசிவுகள் மற்றும் சட்டவிரோத நீர் எடுக்கும் இடங்கள் (illegal water tapping points) இரண்டையும் கண்டறியும் வகையில் (flow patterns) பகுப்பாய்வு செய்கிறது. அதாவது, ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதை போன்ற நன்மை இதில் கிடைக்கிறது.
பொது நலன், செலவு குறைப்பு, புகார்களுக்கு விரைவு தீர்வை நோக்கமாகக் கொண்டு, நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த ரோபோடிக் ஆய்வை விரிவுபடுத்த BWSSB திட்டமிட்டுள்ளது. “குழாய் குறைபாடுகளுக்கு இத்தொழில்நுட்பம் முக்கியமான தீர்வை வழங்குகிறது,” என BWSSB அதிகாரிகள் தெரிவித்தனர். ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications