சொதப்பிய HAL.. சொன்ன டைமுக்கு ஒரு ஜெட்டை கூட கொடுக்கல! கடுப்பான விமானப்படை தளபதி!
பெங்களூர்: இந்திய விமானப்படைக்கு இந்த ஆண்டு பிப்ரவரிக்குள் 11 ஜெட் விமானங்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை ஒன்று கூட கிடைக்கவில்லை என விமானப்படை தளபதி கவலை தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமாக Hindustan Aeronautics Limited (HAL) தான் இந்த விமானங்களை தயாரித்து கொடுக்க ஒப்பந்தம் வாங்கியிருந்தது. ஆனால் சொன்ன நேரத்துக்கு விமானம் கொடுக்கப்படாதது விவாதங்களை எழுப்பியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற விமானப்படையின் கண்காட்சியில் பங்கேற்றிருந்த அதன் தளபதி அமர் ப்ரீத் சிங், "இந்திய விமானப்படையின் தேவைக்கு 83 இலகு ரக போர் விமானங்களை (LCA) ஆர்டர் செய்திருந்தோம். ஒப்பந்தத்தின்படி பிப்ரவரிக்குள் 11 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டிருக்க வேண்டும். இன்று விமான கண்காட்சியில் ஒரு இலகுரக விமானம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த விமானம் முழுமை அடைந்ததாக இல்லை" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது HAL மீதான குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே BSNL, LIC, DD News போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிறுவனங்களின் சேவைகள் போதுமானதாக இல்லை என்று கூறி வருகின்றனர். அப்படி இருக்கும்போது, HAL நிறுவனத்தின் செயல்பாடுகளும் திருப்தியாக இல்லை என்று விமானப்படை தளபதி விமர்சித்திருப்பது, விவாதமாக மாறியிருக்கிறது.
அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும், தரமான உற்பத்தியை கொடுக்க HAL-ல் சில மாற்றங்களை அரசு செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
விஷயம் பெருசான நிலையில், HAL தலைவர் சுனில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, இந்த ஆண்டுக்குள் 12 இலகு ரக போர் விமானங்கள் ஒப்படைக்கப்படும் என்றும், இதில் 11 விமானங்கள் பெங்களூரில் தயாரிக்கப்படும் எனவும், 1 விமானம் நாசிக்கில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது HAL நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறிய பொருட்கள் தயாரிப்பை தனியார் நிறுவனங்களிடம் HAL ஒப்படைத்துவிடுகிறது. இது கூட தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர். எப்படி இருப்பினும் பாதுகாப்பு துறை சார்ந்த பணிகளில் தாமதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவுட்சோர்சிங், தனியார் ஒப்பந்தம் ஆகியவற்றை கைவிட்டு அரசே HAL நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைள் எழுந்து வருகின்றன.
இப்போது உள்ள சூழலில் லடாக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும், பயத்தை ஏற்படுத்தவும் நமக்கு கூடுதல் பலம் தேவைப்படுகிறது. அந்த வகையில் இலகுரக போர் விமானங்கள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. அதுவும் உள்நாட்டு தயாரிப்பில் உருவாகும் விமானங்கள் ராணுவத்திற்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் அரசு கவனக்குறைவாக இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications