ஹிஜாப் தீர்ப்பு.. பெங்களூரில் ஒரு வாரத்திற்கு போராட்டம் & கொண்டாட்டங்களுக்கு தடை!
பெங்களூர்: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அங்குப் பல மாவட்டங்களில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர இந்துத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கான சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று கர்நாடக மாநில அரசும் உத்தரவிட்டது.

ஜிஹாப் விவகாரம்
இந்த சம்பவத்தின் போது கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடும் போராட்டங்களும் நடைபெற்றது. சில கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து, இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி கோஷங்களையும் எழுப்பினர். கல்லூரிகளில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

வழக்கு
இதற்கிடையே ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசின் நடவடிக்கை அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மத சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இன்று தீர்ப்பு
வழக்கு விசாரணையில் இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்த கர்நாடக அரசு, பள்ளி கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்பதாலேயே இந்த விதி உள்ளதாகத் தெரிவித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 11 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தடை
இந்நிலையில், பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கப் பெங்களூரில் போராட்டம், கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை (மார்ச் 15) முதல் மார்ச் 21 வரை ஒரு வாரத்திற்குப் பெங்களூரில் அனைத்து வகையான கூட்டங்கள், போராட்டங்கள் அல்லது கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications