ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுக்கும் குமாரசாமி! பாஜகவுடன் கூட்டணி? என்னாச்சு! கறார் காட்டுகிறதா ஜேடிஎஸ்
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து விட்டதாக செய்திகள் பரவிய நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாராசாமி கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன. எனினும், மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அரியணையை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. எனவே வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு இடையேயான யுத்தம் என்றாகி உள்ளதால், கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

அந்த வகையில், கர்நாடகாவில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடா, ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரைச் சந்தித்துள்ளார். பாஜக - மஜத கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இதை மறுத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி குமாரசாமி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், "பாஜகவுடனான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. இன்னும் பல்வேறு ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது" என்றார்.
ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டு விட்டதாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். தற்போது வரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை. நாங்கள் அன்புடன் சந்தித்துக் கொண்டோம். இதெல்லாம் ஆலோசனையின் ஆரம்ப கட்டம் தான். எங்கள் கட்சியின் நல்லதை பற்றி பேசினார். அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்டியா லோக் சபா தொகுதியை கேட்டு அடம் பிடிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும் நான் மறுக்கிறேன். நான் ஊடகங்களுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அலோசனைகள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது யூகங்களை பரப்பாதீர்கள். எங்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்து கேட்கப்படும் " என்றார்.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பதாகவும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா பரபரப்பு தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜேடிஎஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று எடியூரப்பா இது பற்றி கூறியதாவது:-
ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து நான் பேசியபோது கூட்டணி இறுதியாகவில்லை. இப்போதும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வேறு நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார்கள். எனவே இந்த கூட்டணி குறித்து இன்னும் 2, 3 நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications