ஆசையாக போன எடியூரப்பா.. பூங்கொத்தை வாங்க மறுத்த அமித்ஷா.. என்ன நடந்தது தெரியுமா?
பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்ற மத்திய உள்துறை அமித்ஷா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வழங்கிய பூங்கொத்தை ஏற்க மருத்து அவரது மகன் விஜயேந்திராவிடம் அதே பூங்கொடுத்தை கொடுக்க சொல்லி பெற்றுக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநில பாஜக ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.
இதற்கென பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 5 முறை பிரதமர் மோடி பயணம் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

எடியூரப்பாவின் விலகல்
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து கர்நாடகாவில் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு அம்மாநிலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது.

மதவாத மோதல்கள்
ஹிஜாப், ஹலால் பிரச்சனைகளால் ஏற்பட்ட மத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், லிங்காயத்து சமுதாய மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம் போன்றவற்றால் பாஜகவுக்கு இந்த ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

லிங்காயத்து எதிர்ப்பு
குறிப்பாக கர்நாடகாவில் பெரும் வாக்கு வங்கியை வைத்துள்ள லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவரான எடியூரப்பாவை பாஜக அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக லிங்காயத்து மடத்தின் சாமியார்கள் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டதால் அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில் கடந்த மாதம் லிங்காயத்து சமுதாயத்தினர் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவிடுத்து மீண்டும் தனி மத அந்தஸ்து வழங்க வலியுறுத்தினர். இந்த நிலையில்தான் பாஜக மீண்டும் எடியூரப்பாவுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

எடியூரப்பா பேட்டி
அதை தொடர்ந்து எடியூரப்பாவும் அம்மாநில தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வந்தார். "லிங்காயத்து மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். லிங்காயத்து மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். திப்பு சுல்தான் VS சாவர்க்கர் சர்ச்சைகளால் பெரிய தாக்கங்கள் ஏற்படாது. ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள் எல்லாம் பழைய விசயங்கள்." என்று பாஜகவின் நடவடிக்கைகளையும் விமர்சித்தார்.

பூங்கொத்து சர்ச்சை
இந்த நிலையில், கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காரில் இறங்கியவுடன் அருகில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்க முயன்றார் எடியூரப்பா. ஆனால், அவரிடம் பூங்கொத்தை பெற மறுத்த அமித்ஷா, அதை அவரது மகன் விஜயேந்திராவிடம் வழங்க சொல்லி பெற்றுக்கொண்டார்.

வாரிசு அரசியலா
இந்த வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் எடியூரப்பாவை அமித்ஷா அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் இருப்பதாக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை அவர் முன்னிலைப்படுத்துவது வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications